இலங்கைக்கு கோடிக்கணக்கான டொலர் உதவி!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் காரணமாக பிராந்திய நாடுகளின் பொருளாதாரத்தின் மீது அதிகரித்து வரும் அழுத்தங்களை எதிர்கொள்ள இலங்கைக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கொள்கை அடிப்படையிலான கடன் உதவியை ஆசிய அபிவிருத்தி வங்கி அங்கீகரித்துள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் இந்த நிதியுதவி, நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவதற்கும், வெளிப்புற பொருளாதார அதிர்வுகளுக்கு எதிரான மீட்சித் திறனை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்துறை சார்ந்த சீர்திருத்தங்களை விரைவுபடுத்தவும், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளின் போட்டித்திறனை மேம்படுத்தவும் இந்த நிதி உதவும் என ஆசிய அபிவிருத்தி வங்கி குறிப்பிட்டுள்ளது.
மேலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கான சூழலை வலுப்படுத்துவதற்கும், நிலையான பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்துவதற்கும் இந்தக் கடன் உதவி முக்கிய பங்களிப்பை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நீடித்து வரும் பதற்ற நிலை உலகளாவிய வர்த்தகம், எரிசக்தி விலைகள் மற்றும் நிதிச் சந்தைகளில் ஏற்படுத்தும் தாக்கங்களின் மத்தியில், இலங்கையின் பொருளாதார மீட்சியை ஆதரிக்கும் முக்கிய நடவடிக்கையாக இந்தக் கடன் உதவி அமையும் என ஆசிய அபிவிருத்தி வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.




