VAT வரியால் புத்தகங்களின் விலை கடும் உயர்வு!

அச்சிடப்பட்ட புத்தகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகள் காரணமாக, கடந்த மூன்று ஆண்டுகளில் 50% முதல் 60% வரையிலான எழுத்தாளர்கள் வேறு தொழில்களுக்கு மாறியுள்ளதாக இலங்கைப் புத்தக வெளியீட்டாளர்கள் சங்கம் தெரிவிக்கிறது.
மேலும், 40 சதவீதமான புத்தக வெளியீட்டு நிறுவனங்கள் இத்துறையை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அச்சங்கம் குறிப்பிட்டது.
அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கு முதன்முறையாக 2023 ஆம் ஆண்டில் விதிக்கப்பட்ட பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் சமூக பாதுகாப்பு வரிகள் காரணமாக புத்தகங்களின் விலைகள் உயர்ந்து, விற்பனை குறைந்ததே இதற்குப் பிரதான காரணமாகும்.
உலகின் 95% நாடுகளும், ஆசியாவில் எந்தவொரு நாடும் அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கு வரி விதிப்பதில்லை என்று புத்தக வெளியீட்டாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.
இதன்படி, அச்சிடப்பட்ட புத்தகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள VAT உள்ளிட்ட வரிகளை உடனடியாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அச்சங்கத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் காமிணி மொரகொட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் காமிணி மொரகொட,
நாங்கள் இந்த VAT வரி குறித்துப் பேசுவது வாசிப்புப் புத்தகங்களுக்கு மட்டுமே. இலங்கையில் 76 வருடங்களாக நாம் அனைவரும் எப்போதும் 76, 78 வருடங்களைப் பற்றிப் பேசுகிறோம்.தற்காலத்திலும் இதற்கு வரி விதிக்கப்படவில்லை. 2023 ஜனவரி மாதத்தில்தான் முதன்முறையாக VAT வரி விதிக்கப்பட்டது.
அவ்வாறு வரி விதிக்கப்பட்ட நாளிலிருந்தே எங்கள் துறை பெரும் வீழ்ச்சியடையத் தொடங்கியது.
VAT வரியை நீக்குவது சரியானது என்பது நாட்டில் உள்ள அறிஞர்களுக்கே புரிகிறது. வேறு நாடுகளிலெல்லாம் இல்லாத வகையில், வாசிப்புப் புத்தகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த அநீதியான VAT வரியைப் பற்றியே நாம் பேசுகிறோம்.
இது குறித்துச் சமூகத்திற்குச் சரியான விழிப்புணர்வு இல்லை; வேறு யாருக்கும் விழிப்புணர்வு இல்லை. ஏழைப் பெற்றோர்களும் பிள்ளைகளும் தாங்கள் வாங்கும் புத்தகத்திற்குப் பெரும் தொகையைச் செலுத்துகிறார்கள். இதில் அதிகப் பயனடைவது அரசாங்கம்தான். அது தவறானது என்பதையே நாம் அனைவரும் கூறுகிறோம்.
தயவுசெய்து இந்த VAT வரியை நீக்கித் தருமாறு அரசாங்கத்தையும் அதிகாரிகளையும் கேட்டுக்கொள்கிறோம். இதனால் அரசாங்கத்திற்குப் பெரிய இழப்பு எதுவும் ஏற்படாது என்பதை நாங்கள் தெளிவாகக் கணக்கிட்டுக் காட்டுகிறோம். அதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தாருங்கள். குறைந்தது 10 வருடங்கள் இந்த வரி நீடித்தால், இலங்கையின் எழுத்துத்துறை முற்றிலும் மிகவும் துரதிர்ஷ்டவசமான நிலையை அடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.




