ஒக்டோபர் – நவம்பரில் கனமழை எச்சரிக்கை!

இலங்கையில் இந்த ஆண்டின் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என மேற்கு அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தின் கடலோரப் பெருங்கடலியல் பேராசிரியர் சரித பத்தியராச்சி எச்சரித்துள்ளார்.
வலுப்பெற்று வரும் எல் நினோ காலநிலை நிகழ்வும், இந்தியப் பெருங்கடல் இருமுனையகத்தின் (IOD) மாற்றங்களும் நாட்டின் வானிலை முறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.
அவரது கணிப்பின்படி, செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் தென்மேற்கு பருவமழைக் காலத்தில் வழக்கத்தை விட குறைவான மழைவீழ்ச்சி பதிவாகலாம்.
எனினும், ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நிலைமை மாறி, நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றரைக் கடந்த கனமழை பதிவாகும் வாய்ப்பு காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் வெள்ளப்பெருக்கு மற்றும் நீர்தேக்க முகாமைத்துவம் தொடர்பில் முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டியது அவசியம் என காலநிலை நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.




