போதைப்பொருட்களுடன் சிக்கிய நெடுநாள் மீன்பிடி படகு

இலங்கைக்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நெடுநாள் மீன்பிடி படகு ஒன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த படகு மற்றும் கைது செய்யப்பட்ட 4 சந்தேகநபர்கள் இன்று (17) திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
இலங்கை கடற்படையின் நீண்டதூர நடவடிக்கைக் கப்பல் பிரிவினர் நேற்று (16) ஆழ்கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த நெடுநாள் மீன்பிடி படகை வழிமறித்து சோதனையிட்டனர்.
சோதனையின் போது, அந்தப் படகில் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பெருமளவிலான பொதிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது. இதையடுத்து, படகிலிருந்த நான்கு சந்தேகநபர்களையும் கடற்படையினர் உடனடியாகக் கைது செய்ததுடன் படகையும் கைப்பற்றினர்
கடற்படையினரின் பாதுகாப்பின் கீழ் திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள குறித்த படகில் உள்ள பொதிகளை விரிவாகப் பரிசோதிக்க அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.




