கொழும்புக்கு நீர் வழங்கலில் சிக்கல்!

கொழும்பின் சில பகுதிகளில் இன்று நீர் விநியோகம் தற்காலிகமாக பாதிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அம்பத்தலை மற்றும் கொலன்னாவை பகுதிகளை இணைக்கும் பிரதான நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்டுள்ள திடீர் கோளாறே இந்த நிலைக்கு காரணமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழுதுபார்ப்பு பணிகள் அவசரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இன்று இரவு 8.00 மணி வரை சில பகுதிகளுக்கு நீர் வழங்கல் இடைநிறுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மொரகஸ்முல்ல, ராஜகிரிய, நாவல, ஒபயசேகரபுர மற்றும் கொலன்னாவை நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் இந்த தற்காலிக நீர் விநியோகத் தடையால் பாதிக்கப்படவுள்ளனர்.
எனவே, தேவையான அளவு நீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.




