தனியார் மருத்துவமனைகளில் காலாவதியான மருத்துவப் பொருட்கள் மீட்பு!

இலங்கை முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ ஆய்வகங்களில் நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) மேற்கொண்ட அதிரடிச் சோதனைகளில், காலாவதியான மற்றும் தகுதியற்ற மருத்துவப் பொருட்கள் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. நாடு தழுவிய ரீதியில் 52 இடங்களில் நடத்தப்பட்ட இந்தச் சோதனைகளில், இரத்த சர்க்கரை மற்றும் டெங்கு நோய் கண்டறியும் பரிசோதனைக் கருவிகள், ஆய்வக இரசாயனங்கள் மற்றும் இதய நோயாளிகளுக்கான ஜெல்கள் உள்ளிட்ட பல பொருட்கள் பயன்பாட்டிற்குப் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பயன்பாட்டில் இருந்த பொருட்களுடன் காலாவதியான பொருட்களைச் சேர்த்து வைத்திருந்த கடுமையான விதிமீறல்களைச் சுட்டிக்காட்டிய அதிகாரிகள், கைப்பற்றப்பட்ட பொருட்களைப் பொறுப்பேற்று விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர். நுகர்வோர் விவகார ஆணையச் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்காக இத்தகைய சோதனைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் ஆணையம் அறிவித்துள்ளது.




