போதைப்பொருளுடன் சிக்கிய பிக்குகளுக்கு தடுப்பு காவல்…

110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய “குஷ்” மற்றும் “ஹேஷ் போதைப்பொருள் தொகையுடன் கைதான 22 பிக்குகளையும் 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சந்தேகநபர்கள்நேற்று (26) பிற்பகல் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது அவர்களை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீர்கொழும்பு மேலதிக நீதவான் சுபானி அபேசேகர உத்தரவிட்டுள்ளார்.
அதேநேரம் இந்தக் காவி உடை தரித்த நபர்களை வழிநடத்தியதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபர், கம்பஹா – மீகஹமுல்ல பகுதியில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
தாய்லாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்தக் காவி உடை தரித்த குறித்த 22 சந்தேக நபர்களும், நேற்றைய முன்னைய நாள் (25) இரவு 10.11 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளனர்.
தமக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலுக்கு அமைய, இவர்கள் அனைவரிடமும் இருந்த ஒரே வகையிலான, வெவ்வேறு நிறங்களைக் கொண்ட பயணப் பொதிகளைப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் சோதனைக்கு உட்படுத்தினர்.
கல்வி உபகரணங்கள், இனிப்புப் பண்டங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அந்தப் பயணப் பொதிகளில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த “குஷ்” மற்றும் “ஹேஷ்” போதைப்பொருட்களை அதிகாரிகள் இதன்போது மீட்டனர். இதனைத் தொடர்ந்து, 22 நபர்களும் கைது செய்யப்பட்டனர்.




