புதுப்பொலிவு பெற்ற மரதானை ரயில் நிலையம் : Clean Srilanka திட்டத்தின் பணிகள் நிறைவு.

Clean Sri Lanka தேசியத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள நூறு ரயில் நிலையங்களை சர்வதேச தரத்திற்கு நவீனமயமாக்கும் ‘கனவுத் தலம்’ (Sihina Payananthaya) செயற்திட்டத்தின் ஒரு முக்கிய மைல்கல்லாக, மரதானை ரயில் நிலையத்தின் முதற்கட்ட புனரமைப்புப் பணிகள் இன்று மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டன.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நவீனமயமாக்கப்பட்ட வசதிகள் பயணிகளின் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
இப்புனரமைப்பின் மூலம் ரயில் நிலையத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், பயணிகளுக்கான நவீன சுகாதார வசதிகள், தங்குமிட வசதிகள் மற்றும் டிஜிட்டல் தகவல் திரைகள் போன்ற பல புதிய சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பொது மற்றும் தனியார் துறையினரின் இத்தகைய ஆரோக்கியமான இணைப்பானது, நாட்டின் போக்குவரத்துத் துறையில் ஒரு பாரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் எனத் தெரிவித்தார். ‘கனவுத் தலம்’ திட்டத்தின் அடுத்தடுத்த கட்டங்கள் நாட்டின் ஏனைய பிரதான ரயில் நிலையங்களிலும் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.




