பிரசாத் மானகே விடுத்த கோரிக்கை

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே , எரிபொருள் விநியோகத்திற்காக அரசாங்கம் அறிமுகப்படுத்திய QR நடைமுறை காரணமாக வாகன இறக்குமதியாளர்கள் பாரிய சிக்கலை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வாகனங்களை இறக்குமதி செய்யும் போது அவற்றுக்கு எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்குத் தகுந்த வேலைத்திட்டம் ஒன்றினை உருவாக்கித் தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் போது அவை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைவதாகவும், அங்கிருந்து அத்தகு வாகனங்களை கொழும்புக்கு கொண்டு வருவதில் எரிபொருள் தட்டுப்பாடு பெரும் தடையாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அரசாங்கத்துடன் கலந்துரையாடி ஒரு தீர்மானத்திற்கு வரத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.




