டொலர் மோசடி தொடர்பாக அரசாங்கம் விளக்கம் தர வேண்டும் என சஜித் கோரிக்கை!

அவுஸ்திரேலியாவுக்கு செலுத்த வேண்டிய 2.5 மில்லியன் டொலர், திருடப்பட்டதால், ஏற்பட்ட இழப்பு தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகளை அரசாங்கம் நாட்டிற்கு அறிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் மற்றும் அரசின் வரிப் பணமான 2.5 மில்லியன் டொலரை ஒரு இணைய மோசடியின் ஊடாக இழக்கப்பட்டமை, நாட்டின் நிதி பாதுகாப்பு தொடர்பான பாரிய பிரச்சினை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சம்பவம் ஜனவரி மாதம் நடந்துள்ள நிலையில், அரசும், நிதி அமைச்சும் இந்த நிதி இழப்பை இரகசியமாக வைத்திருந்தது ஏன்? என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த நிதி இழப்பு நிகழ்ந்த பின்னர் அதே நிறுவனத்தின் பணியாளர்களையே, விசாரணைக்கு நியமிப்பது பொருத்தமான விடயமல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வெளிநாட்டுக் கடன்கள் மற்றும் வட்டித் தவணைகளைத் திருப்பிச் செலுத்தும் செயன்முறைகளில் போதுமான பாதுகாப்பு நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டனவா? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
இதேவேளை, இழந்த 25 இலட்சம் டொலருக்கான இழப்பீட்டை நாட்டு மக்களின் வரிப்பணத்திலிருந்து, மீளப்பெறக்கூடாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.




