கட்டுநாயக்கவில் 16 பயணப்பொதிகளில் கடத்தப்பட்ட சிகரெட்டுகள் பறிமுதல்

சுமார் 3 கோடியே 86 லட்சத்து 70 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் இலத்திரனியல் சிகரெட்டுகளை (E-cigarettes) சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தின் பயணப்பொதி பகுதியில் (Baggage Belt) கைவிட்டுச் சென்ற நிலையில், இன்று விமான நிலைய சுங்க அதிகாரிகளால் அவை கைப்பற்றப்பட்டுள்ளன.
கொழும்பு பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய வர்த்தகர் ஒருவர், தனது பயணப்பொதிகளுக்குள் வெளிநாட்டு சிகரெட்டுகளை மறைத்து வைத்து, கட்டுநாயக்க விமான நிலையத்தின் “பசுமை வழி” (Green Channel) ஊடாக வெளியேற முயன்றபோது சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, அவருடன் வந்த ஏனைய பயணிகள், தாம் கொண்டு வந்த 14 பயணப்பொதிகளை அங்கேயே கைவிட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
டுபாயிலிருந்து வருகை தந்த எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK-654 எனும் விமானம் மூலன் இன்று அதிகாலை 12:55 மணி இலங்கையை வந்தடைந்துள்ளார்.
16 பயணப்பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 229,800 வெளிநாட்டு சிகரெட்டுகள் 1149 மன்செஸ்டர் ரக சிகரெட் கார்ட்டூன்கள் மற்றும் 113 இலத்திரனியல் சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




