தற்போதைய காலநிலை மே மாதம் வரை நீடிக்கும்

தற்போதைய காலநிலை மே மாதம் வரை நீடிக்கும் எனவும், மே மாதம் இறுதி வாரத்தில் இருந்து தென்மேற்கு பருவமழை தொடங்கிய பின்னர் இந்த நிலை தவிர்க்கப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான தெரிவித்துள்ளார்.
மேலும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில், காற்றின் வேகம் மிகக் குறைவாகக் காணப்படுவதுடன், காற்று குறிப்பிட்ட திசையின்றி வீசுவதனால் வளிமண்டலத்தில் வெப்பம் அதிகமாக உணரப்படுவதாக தெரிவித்தார்.
சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுப்பதாலும், மேகமூட்டம் குறைவாக இருப்பதாலும் நேரடி சூரியக் கதிர்வீச்சு தரை மற்றும் கடற்பரப்பை வழக்கத்தை விடவும் அதிகமாக வெப்பமடையச் செய்கின்றது.
குறிப்பாக, காற்றிலுள்ள அதிகப்படியான ஈரப்பதம் காரணமாக, உடலில் ஏற்படும் வியர்வை எளிதில் ஆவியாகாமல் தங்கிவிடுகிறது, இது மனித உடலுக்கு அதிக வெப்பத்தை உணரச் செய்கிறது என அவர் தெரிவித்தார்.




