இன்றைய காலநிலை!

இன்று மாலை முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை நிலைமை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களுடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கு மேற்பட்ட பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியமும் காணப்படுகின்றது.
மேலும், ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
அதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்கள் உள்ளிட்ட திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை நேரங்களில் திடீர் காற்று மற்றும் மின்னல் தாக்கம் காரணமாக ஏற்படக்கூடிய அபாயங்களைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.




