அமைதி நடை பயணத்தின் 7ஆம் நாள் இன்று..

‘ஏஹிபஸ்ஸிகோ’ (Ehipassiko) சமாதான பாதயாத்திரை இன்று யக்கல அபேசேகராமயவிலிருந்து ஆரம்பமாகி களனி ரஜமஹா விகாரை வரை பயணிக்கவுள்ளது.
நேற்று (26) காலை தோலங்கமுவ தேசிய பாடசாலையிலிருந்து ஆரம்பமான இந்த சமாதான நடைபயணம், இரவு வேளையில் யக்கல அபேசேகராமயவை வந்தடைந்தது.
கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான மக்கள் இந்தப் பாதயாத்திரையில் கலந்துகொண்டதைக் காணமுடிந்தது. வெப்பத்தினால் வீதி சூடாவதால் நடைபயணத்தில் ஈடுபடும் தேரர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைக் குறைக்க, வீதியில் வாழை இலைகளை விரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
சமாதான நடைபயணத்தில் ஈடுபடும் மகா சங்கத்தினருக்கு மலர் தூவி கௌரவிப்பதற்கும், அவர்கள் செல்லும் பாதையில் மலர்களைத் தூவுவதற்கும் பல பக்தர்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
மத நல்லிணக்கம் மற்றும் சமாதானம் குறித்த செய்தியை உலகிற்கு வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இந்த நடைபயணத்தில், பௌத்தர்களுக்கு மேலதிகமாக ஏனைய மத மற்றும் இனக் குழுக்களும், பிற மதத் தலைவர்களும் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.




