எயார்பஸ் வழக்கில் நாமல் ராஜபக்ச இன்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இன்று (18) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
சர்ச்சைக்குரிய எயார்பஸ் வானூர்தி கொள்வளவு தொடர்பான விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக கடந்த 4 ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையானபோது நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில், கையூட்டலாக 1.4 மில்லியன் யூரோக்களுக்கும் அதிகமான தொகை சிங்கப்பூர் வங்கிக் கணக்கொன்றில் வரவு வைக்கப்பட்டதாகவும், அதிலிருந்து 8 இலட்சம் அமெரிக்க டொலர்கள் இலங்கை வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
பின்னர், அந்த 8 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு நிகராக, சுமார் 10 கோடி ரூபாய் தொகையை நாமல் ராஜபக்ச பல தவணைகளில் பெற்றுக்கொண்டதாகவும் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி, மறைந்த கபில சந்திரசேன குற்றச்சாட்டுக்கு உள்ளாகி கைது செய்யப்பட்டிருந்தார்.
பின்னர் அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த மே மாதம் 8 ஆம் திகதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக நிதித்தூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் விசாரணையில் நாமல் ராஜபக்ச சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.
அந்த வழக்கில், அவரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் நேற்று முன்தினம் (16) உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




