இலங்கை–தாய்லாந்து உறவுகளை வலுப்படுத்த இணக்கம்; விசா விலக்கை விரைவுபடுத்த கவனம்!

இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு இரு நாடுகளும் உடன்பாடு தெரிவித்துள்ளன.
பாங்கொக்கில் நடைபெற்ற உயர்மட்டச் சந்திப்பின் போதே இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் தாய்லாந்தின் பதில் வெளிவிவகார அமைச்சர் சரண் சரோஎன்சுவான் (Sarun Charoensuwan) ஆகியோருக்கு இடையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பின் போது, சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கான விசா விலக்கு நடைமுறையை விரைவுபடுத்துவது குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
இந்த திட்டம் இரு நாடுகளுக்கும் இடையிலான பயணம், சுற்றுலா மற்றும் மக்கள் தொடர்புகளை மேலும் இலகுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, தொழிலாளர் இடப்பெயர்வு, கல்வி, கடல்சார் பாதுகாப்பு மற்றும் கலாசார பரிமாற்றங்கள் உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும் இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.
இலங்கை – தாய்லாந்து உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும், இரு நாட்டு மக்களின் பரஸ்பர நன்மைக்காக நடைமுறைச் சாத்தியமான துறைகளில் கூட்டுப் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கும் இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.




