இலங்கையின் அரசியல் தீர்வு குறித்து இந்தியா மீண்டும் குரல்!

நீண்ட காலமாகத் தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தல்களை கூடிய விரைவில் நடத்துமாறும், தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் அரசியலமைப்பின் தொடர்புடைய விதிகளை முழுமையாகச் செயல்படுத்துமாறும் இலங்கை அரசாங்கத்திடம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.
உத்தியோகப்பூர்வ பயணமாக இலங்கை வந்தடைந்த இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ விக்ரம் மிஸ்ரி, நேற்று (05) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்தித்தபோது இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது.
2017 மற்றும் 2019-க்கு இடையில் 9 மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், அத்தேர்தல்கள் நடத்துவது தொடர்ந்து தாமதப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தப் பயணத்தின்போது, இந்திய வெளியுறவுச் செயலாளர், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் டாக்டர் ஹரினி அமரசூரிய, வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் மற்றும் அமைச்சரவைச் செயலாளர் அருணி ரணராஜா ஆகியோருடன் கலந்துரையாடினார். தித்வா புயலுக்குப் பிறகு இலங்கையின் மீட்புக்கான ஆதரவு, எரிசக்தி ஒத்துழைப்பு, வர்த்தக ஒப்பந்தத்தைப் புதுப்பித்தல், திருகோணமலையை எரிசக்தி மையமாக மேம்படுத்துதல், காங்கேசன்துறை துறைமுகத்தை நவீனமயமாக்குதல் மற்றும் டிஜிட்டல் அடையாளத் திட்டம் உள்ளிட்ட இந்திய ஆதரவுத் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.




