வெளிநாட்டுக் கடன் அதிகரித்ததாக கூறுவது தவறு – பிரதி அமைச்சர்

அரசாங்கம் பெற்றுள்ள வெளிநாட்டுக் கடனின் அளவு அதிகரித்துள்ளது என்று சில தரப்பினர் கூறும் கூற்றுகளைத் தாம் வன்மையாக நிராகரிப்பதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் டொக்டர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எந்தவொரு அதிகாரப்பூர்வ தரவுகளும் இல்லாமல் இத்தகைய கூற்றுகளை வௌியிடுவது வருந்தத்தக்கது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
மத்திய வங்கி அண்மையில் வெளியிட்ட தகவல்களை மேற்கோள் காட்டி, அரசாங்கத்தின் கடன் 190 பில்லிய ரூபாய்களுக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது என்று சில ஊடக அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
கடன் தொகை எவ்வாறு அதிகரித்துள்ளது என்பது குறித்து அந்த அறிக்கைகளில் குறிப்பிட்ட விளக்கம் எதுவும் இல்லை என்றும், அதில் வழங்கப்பட்டுள்ள சில தரவுகளும் தவறானவை என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
அரசாங்கக் கடன் குறித்த அதிகாரப்பூர்வ மற்றும் பொறுப்பான தகவல்கள், காலாண்டுக்கு ஒருமுறை வெளியிடப்படும் ‘கடன் அறிக்கை’ (Debt Bulletin) மூலம் வழங்கப்படுகின்றன என்று அமைச்சர் கூறினார்.
அந்த அறிக்கைகளில் உள்நாட்டுக் கடன், வெளிநாட்டுக் கடன், நாடுகள் பெற்ற கடன், அத்துடன் பலதரப்பு, இருதரப்பு மற்றும் வர்த்தக வெளிநாட்டுக் கடன் குறித்த விரிவான தகவல்கள் அடங்கியுள்ளன என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.
எனவே, கடன் தொடர்பான தகவல்களை அளிக்கும்போது, அதிகாரப்பூர்வ ஆவணங்களையும் தரவுகளையும் அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தியதோடு, அந்த அதிகாரப்பூர்வ தரவுகளின்படி அரசின் கடன் அந்த அளவிற்கு அதிகரிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.




