இலங்கை வீரர்களின் புதிய முயற்சிக்கு WCA பாராட்டு!

இலங்கை தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் சங்கம் (SLPCA) அமைக்கப்பட்டதை உலக கிரிக்கெட் வீரர்கள் சங்கம் (WCA) வரவேற்றுள்ளதுடன், இதனை இலங்கையில் வீரர்களின் பிரதிநிதித்துவத்திற்கான ஒரு மைல்கல் வளர்ச்சி எனவும் வர்ணித்துள்ளது.
புதிய சங்கத்தின் உருவாக்கம், இலங்கை கிரிக்கெட்டின் தொடர்ச்சியான தொழில்முறைமயமாக்கலுக்கும் வளர்ச்சிக்கும் ஆதரவளிப்பதோடு, விளையாட்டு பரிணமிக்கும்போது வீரர்களுக்கு ஒரு கூட்டுக்குரலையும் வழங்கும் என்று WCA கூறியது.
இலங்கையின் தொழில்முறை கிரிக்கெட் வீரர்களால் சமீபத்தில் தொடங்கப்பட்ட SLPCA-வின் முதல் தலைவராக, ஆடவர் வெள்ளைப்பந்து அணியின் கேப்டன் குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டார்.
வலுவான வீரர் பிரதிநிதித்துவமும் வலுவான ஆட்டமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்று கூறியதோடு, சங்கத்தை அமைத்ததற்காக இலங்கை வீரர்களுக்கு WCA தலைமை நிர்வாக அதிகாரி டாம் மோஃபாட் வாழ்த்து தெரிவித்தார்.
“கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து வீரர்களுக்கு உண்மையான குரல் இருக்கும்போது அது செழிக்கும். மேலும், ஒன்றுபட்ட குரலுடன் ஒன்றிணைவதன் மூலம், இலங்கை வீரர்கள் இந்த விளையாட்டின் நீண்டகால ஆரோக்கியம், நேர்மை மற்றும் தொழில்முறை முன்னேற்றத்திற்கான ஆழ்ந்த அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்,” என்று மொஃபாட் கூறினார்.
இலங்கையை “கிரிக்கெட்டின் சிறந்த நாடுகளில் ஒன்று” என்று வர்ணித்த அவர், எஸ்.எல்.பி.சி.ஏ-வின் உருவாக்கம், உலகம் முழுவதும் நவீன தொழில்முறை விளையாட்டு எடுத்துள்ள திசையைப் பிரதிபலிப்பதாகக் கூறினார்.
சமீபத்தில் அமெரிக்க கிரிக்கெட் வீரர்கள் சங்கம் நிறுவப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை சங்கமும் நிறுவப்பட்டுள்ளது என்று உலக கிரிக்கெட் சங்கம் குறிப்பிட்டது.
சமீபத்திய முன்னேற்றங்களின்படி, உலகின் முதல் 19 கிரிக்கெட் நாடுகளில் 17 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் தற்போது WCA-வில் இணைந்துள்ளனர்.
இந்த உலகளாவிய அமைப்பு, 17 முன்னணி கிரிக்கெட் நாடுகளில் பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ளதுடன், அதன் உலகளாவிய வீரர் உரிமைகள் திட்டத்தில் 750-க்கும் மேற்பட்ட தற்போதைய சர்வதேச வீரர்கள் பங்கேற்கின்றனர்.




