தனது சம்பள பட்டியலை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட M.Pஅர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெறும் வேதனம் மற்றும் கொடுப்பனவுகள் குறித்து பொதுமக்கள் அறிந்திருக்க வேண்டும் என்ற நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் இன்று காலை தனது அதிகாரப்பூர்வ முகநூல் கணக்கு மூலம், கடந்த மாதம் தாம் பெற்ற நாடாளுமன்ற சம்பளப் பட்டியலை வெளியிட்டு இந்தப் பதிவை இட்டார்.
அவர் வெளியிட்டுள்ள ஆவணத்தின்படி, மார்ச் மாதத்திற்கான அவரது மொத்த வேதனம் மற்றும் கொடுப்பனவுகள் 415,169.93 ரூபாவாகும்.
இதிலிருந்து வருமான வரி, வீட்டு வாடகை, மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்கள் என மொத்தம் 19,308.71 ரூபா கழிக்கப்பட்ட நிலையில், அவரது வங்கி கணக்கில் 395,861.22 ரூபா தேறிய வேதனமாக வைப்பிலிடப்பட்டுள்ளது.
குறித்த வேதன விபரங்களின்படி, மாதாந்த கொடுப்பனவாக 54,285 ரூபாவும், தொலைபேசிக் கொடுப்பனவாக 50,000 ரூபாவும், போக்குவரத்து கொடுப்பனவாக 15,000 ரூபாவும் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் அலுவலக கொடுப்பனவாக ஒரு இலட்சம் ரூபாவும், எரிபொருள் கொடுப்பனவாக 179,707.93 ரூபாவும், அமர்வு கொடுப்பனவாக 15,000 ரூபாவும் உள்ளடங்கியுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இவ்வாறான வேதனங்களையே பெறுகின்ற போதிலும், அதன் விபரங்கள் பொதுமக்களுக்குத் தெரிவதில்லை என எம்.பி அர்ச்சுனா குறிப்பிட்டுள்ளார்.
அரசியல்வாதிகளை விமர்சிப்பதற்கு முன்னர் பொதுமக்கள் இது போன்ற உண்மைத் தன்மைகளைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் எனவும், வெளிப்படைத்தன்மை மிக முக்கியமானது எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.




