செப்டம்பர் 30க்குள் முதியோர் இல்லங்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்!

பதிவு செய்யப்படாத அனைத்து முதியோர் இல்லங்களும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என தேசிய முதியோர் செயலகம் தெரிவித்துள்ளது.
பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் தொடர்பாக தற்போது கணக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டு வருவதாக அதன் பணிப்பாளர் கே. சதுர மிஹிதும் ‘அத தெரண’விடம் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த தேசிய முதியோர் செயலகத்தின் பணிப்பாளர் கே. சதுர மிஹிதும்,
“தற்போது இலங்கை முழுவதும் உள்ள முதியோர் பராமரிப்பு நிலையங்கள் பதிவு செய்யப்படாமை குறித்து நாம் அனைவருக்கும் தெளிவுபடுத்தி, அவர்களது முதியோர் இல்லங்கள் தொடர்பான அடிப்படைத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான கணக்கெடுப்பு ஒன்றை தற்போது முன்னெடுத்து வருகிறோம்.
இதுவரை அந்தத் தகவல்களை வழங்காமல், தற்போதும் முதியோர் பராமரிப்பு நிலையங்களை நடத்திச் செல்பவர்கள் எவரேனும் இருப்பார்களாயின், நாம் வழங்கியுள்ள கூகுள் படிவத்தை (Google Form) பூர்த்தி செய்து அந்தத் தகவல்களை எமக்கு வழங்க முடியும்.
இந்த பதிவானது, எதிர்காலத்தில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள விசேட வேலைத்திட்டங்களுக்கு அவர்கள் பங்களிப்பை வழங்குவதற்கு முக்கியமானதாக அமையும்.
ஐந்துக்கும் மேற்பட்ட முதியவர்களுக்கு தங்கி வாழும் பராமரிப்பை வழங்கும் ஒருவர் இதனைப் பதிவு செய்யத் தவறினால், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.
செப்டம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
தற்போது முதியோர் பராமரிப்பு நிலையங்களை நடத்திச் செல்லும், இதுவரை பதிவு செய்யப்படாத 311 நிலையங்களின் பட்டியல் எங்களிடம் உள்ளது. அந்த 311 நிலையங்களுக்கும் நாம் தனிப்பட்ட முறையில் கடிதங்களை அனுப்பியுள்ளோம்” என்றார்.




