2027 உலகக் கிண்ணத்தை இலக்காகக் கொண்டு பீட்டர்சன் நியமனம்!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான, கெவின் பீட்டர்சன் (Kevin Pietersen) , இங்கிலாந்து வெள்ளைப் பந்து (ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20) கிரிக்கெட் அணிகளின் சிறப்பு ஆலோசகராகப் (Specialist Mentor) நியமிக்கப்பட்டுள்ளார்.
2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணத் தொடரை இலக்கு வைத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை அணிக்கு எதிரான வெள்ளைப் பந்து தொடரில் பயிற்றுவிப்பாளராக செயற்படும் பிரெண்டன் மெக்கல்லம் ( Brendon Mccullum) தலைமையிலான நிர்வாகக் குழுவுடன் பீட்டர்சன் இணையவுள்ளார்.
எதிர்வரும் அவுஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிரான சுற்றுப்பயணங்களின் போதும், எதிர்வரும் உள்நாட்டு தொடர்கள் மற்றும் 2027 உலகக் கிண்ணம் வரையிலான காலப்பகுதி கிரிக்கெட் தொடர் வரையிலும் இவர் இங்கிலாந்து அணியுடன் பணியாற்றுவார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நியமனம் தொடர்பில் கருத்து வெளியிட்ட பீட்டரசன் “தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்தை வெல்லும் நோக்கில், இந்த அணிக்கு உதவ அழைக்கப்பட்டதை நான் பெரும் பெருமையாகக் கருதுகிறேன்,” என தெரிவித்துள்ளார்.
2014 இல் சர்வதேசப் போட்டியிலிருந்து ஓய்வுபெற்ற பீட்டர்சன், ஒருநாள் போட்டிகளில் 4,440 ஓட்டங்களையும், இருபதுக்கு 20 போட்டிகளில் 1,176 ஓட்டங்களையும் பெற்றுள்ளதோடு சர்வதேச கிரிக்கெட் சபையின் (ICC) ‘ஹால் ஆஃப் ஃபேம்’ (Hall Of Fame) விருதை வென்றவருமாவார்.
அத்துடன் 2010 இல் இங்கிலாந்து இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய அணியிலும் இவர் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




