திருகோணமலை மாவட்டத்தில் கடந்த ஆறு நாட்களுக்குள் அடையாளம் காணப்பட்டுள்ள 67 கொரோனா நோயாளர்கள்

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த ஆறு நாட்களுக்குள் 67 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 6 நாட்களுக்குள் திருகோணமலை நகர் பகுதியில் 43 பேர் இனங்காணப்பட்டுள்ளதுடன் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஏழு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் 12 பொலிஸ் உத்தியோகத்தர்களும், மூதூர் பகுதியைச் சேர்ந்த இருவரும், தம்பலகாமத்தில் ஒருவரும், சேருவில பிரதேசத்தில் ஒருவரும், கோமரங்கடவல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒருவரும் என மொத்தமாக 67 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட முருகாபுரி, அபயபுர, துளசிபுரம் ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன.

இதேவேளை கிழக்கு மாகாணத்தில் இன்று வரைக்கும் 846 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.