இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு மட்டும் சொந்தமான நாடு அல்ல – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ் மக்கள் எதிர்பார்த்த உரிமைகள் எதுவும் மாகாண சபை முறைமை ஊடாக கிடைக்கவில்லை எனவும் இதனால், தானும் மாகாண சபை முறைமையை எதிர்ப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

எனினும் பௌத்த பிக்குகள் மாகாண சபை முறைமைக்கு எதிராக கொண்டுள்ள நிலைப்பாட்டுக்கும் தனது நிலைப்பாட்டுக்கும் முற்றிலும் வேறுபாடு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மாகாண சபை முறைமையில் ஆரம்பத்தில் எதிர்பார்த்த நோக்கம் நிறைவேறவில்லை. மாகாண சபை முறைமைக்கு அப்பால் சென்ற அதிகார பரவலாக்கலை கொண்ட வேலைத்திட்டத்திற்கு செல்ல வேண்டும் என்பது தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு. இதனால், மாகாண சபைக்கு அப்பால் செல்ல வேண்டுமே அன்றி மாகாண சபை முறைமையை ஒழிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த நாடு சிங்கள பௌத்தர்களுக்கு மட்டும் சொந்தமான நாடு கிடையாது. அனைத்து இன மக்களுக்கும் சொந்தமான நாடு. சில இனவாத பௌத்த பிக்குகள் இதனை புரிந்துக்கொள்ளாத செயற்பட்டு வருவது குறித்து வருத்தப்படுகிறேன். இந்த நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் என அனைத்து இன மக்களுக்கு சம உரிமையுள்ள நாடு. சிங்களவர்களை தவிர ஏனைய இன மக்களை சமமான நிலையில் கருத முடியவில்லை என்றால், இந்த நாட்டை இனவாத நாடு என்று அடையாளப்படுத்த முடியும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.