13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த அர்த்தமுள்ள அதிகார பரவலாக்கலை மேற்கொள்ள வேண்டும் – சுப்ரமணியம் ஜெய்சங்கர்

இலங்கை தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற 13 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி அர்த்தமுள்ள அதிகார பரவலாக்கலை மேற்கொள்ள வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றப்படுவது குறித்து இந்தியா உன்னிப்பாக அவதானித்து வருகிறது.

இந்தியா இலங்கையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக நீண்ட காலமாக ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருகிறது.

இலங்கையின் ஐக்கியம், ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்காக இந்திய கூடுதலான அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது.

13 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் உட்பட அர்த்தமுள்ள அதிகார பரவலாக்கல் மூலமே இலங்கையின் முன்னேற்றம் மற்றும் அபிவிருத்தி என்பன உண்மையாக வகையில் முன்நோக்கி செல்ல முடியும் எனவும் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.