ஜெனீவா நெருக்கடியை சமாளிக்க ஆணைக்குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் தீர்மானம்

பெப்ரவரி – மார்ச் மாதங்களில் ஜெனீவாவில் கூடவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரை சமாளிக்க இலங்கை அரசு மாற்று நடவடிக்கைகளை கையாள தீர்மானித்துள்ளது.

இறுதிக்கட்ட யுத்த போர்குற்றங்கள், பொறுப்புக்கூறல் விடயங்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை மீண்டும் பரிசீலிக்கவும், இலங்கையின் சார்பில் யோசனை ஒன்றினை முன்வைக்கவும் மூவர் அடங்கிய ஆணைக்குழு ஒன்றினை அமைக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

இறுதிக்கட்ட யுத்த பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும் எனவும், இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் சர்வதேச கண்காணிப்பு அவசியம் எனவும் மனித உரிமை விடயங்களில் இலங்கை தொடர்ந்தும் தவறிழைத்து வருவதாகவும் தமிழர் அரசியல் பிரதிநிதிகள் கையொப்பமிட்டு அறிக்கையொன்றை ஜெனீவாவிற்கு அனுப்பி வைத்துள்ள நிலையில், அரசாங்கம் இந்த விடயங்களை அவதானிக்கும் விதம் மற்றும் மாற்று நடவடிக்கைகள் என்னவென அமைச்சரவை இணை பேச்சாளர் உதய கம்மன்பிலவிடம் வினவியபோது அவர் கூறியதானது,

இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் என்ற குற்றச்சாட்டு முதலில் பொய்யானதாகும், அதனை அரசாங்கம் முழுமையாக நிராகரித்தே வருகின்றது. விடுதலைப்புலிகள் பயங்கரவாத இயக்கத்துடன் இடம்பெற்ற ஆயுத போராட்டத்தில் மூன்று இலட்சத்துக்கும் அதிகமான பொதுமக்களை இலங்கை இராணுவம் காப்பாற்றியுள்ளனர். அவ்வாறான நிலையில் தமிழர் அரசியல் தரப்பு தொடர்ச்சியாக இலங்கை இராணுவத்தையும், அரசாங்கத்தையும் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

கடந்த ஆட்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ரணில் – மைத்திரி அரசாங்கத்திற்கு முழுமையான ஆதரவை வழங்கி பொறுப்புக்கூறல், இராணுவ குற்றங்களை விசாரிக்கும் செயற்பாடுகள் மற்றும் சர்வதேச விசாரணையை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் அழுத்தம் கொடுத்தனர். அதேபோல் தமிழர் தரப்பின் வேண்டுகோளுக்கு இணங்க கடந்த அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் இலங்கையை சர்வதேச பொறிக்குள் சிக்கவைக்க பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தார். அதில் பிரதான ஒன்றாகவே 2015 ஆம் ஆண்டு அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்குவதாக வாக்குறுதியளித்தார். இது முற்று முழுதாக இலங்கையை காட்டிக்கொடுக்கும் துரோகச்செயல் என்பதே எமது கருத்தாகும்.

எவ்வாறு இருப்பினும் இம்முறை பெப்ரவரி -மார்ச் மாதங்களில் ஜெனிவாவில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கை மாற்று நடவடிக்கைகளை கையாள தீர்மானித்துள்ளது.

யுத்தத்தின் பின்னர் போர்குற்றங்கள், பொறுப்புக்கூறல் விடயங்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை மீண்டும் அவதானிக்கவும், இலங்கையின் சார்பில் யோசனை ஒன்றினை முன்வைக்கவும் ஆணைக்குழு ஒன்றினை அமைக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

நாளை (இன்று) கூடும் அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து ஆராயப்படுவதுடன் நியமிக்கப்படும் உறுப்பினர்கள் குறித்தும் தீர்மானம் எடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. எவ்வாறு இருப்பினும் மூவர் அடங்கிய ஆணைக்குழு ஒன்றினை அமைக்கவே தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆணைக்குழு அடுத்து கூடவுள்ள ஜெனிவா கூட்டத் தொடருக்கு முன்னர் இலங்கையின் முன்னைய ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஆராய்ந்து புதிதாக தீர்மானம் ஒன்றினை வரையவும், அதனை ஜெனீவாவில் சமர்ப்பித்து அடுத்த கட்டமாக இலங்கை கையாளவுள்ள நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்தவும் உள்ளதென அவர் கூறினார்.