இலங்கைக் கடற்படையால் நடுக்கடலில் 4 மீனவர்கள் உயிரிழப்பு! கொதிக்கும் தமிழ்நாடு ராமேஸ்வர மீனவர்கள்

கடல் சீற்றத்தால் படகு இலங்கைக் கடற்படை கப்பல்மீது மோதியதில் கப்பல் சேதமானது, இதனால் ஆத்திரமடைந்த இலங்கைக் கடற்படையினர் மீனவர்களைத் தாக்கியதுடன், மாற்றுக் கப்பலைக் கொண்டு மீன்பிடிப் படகைத் தாக்கி மூழ்கடித்தனர்.

இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டு நடுக்கடலில் உயிரிழந்த மீனவர்களின் உடல்களை மீட்டுத்தரக் கோரியும், தாக்குதலில் ஈடுபட்ட இலங்கைக் கடற்படையினரைக் கண்டித்தும் ராமேஸ்வரம் மீனவர்கள் குடும்பத்துடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

குறுகிய கடல் பரப்பை எல்லையாகக்கொண்ட ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் எல்லை தாண்டிச் செல்லும் நிலை உள்ளது.

இதனால் ராமேஸ்வரம், மண்டபம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டக் கடலோரப் பகுதிகளிலிருந்து மீன்பிடிக்கச் செல்லும் விசைப் படகுகளையும், அவற்றில் செல்லும் மீனவர்களையும் இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்து வருகின்றனர்.

பல்வேறு இன்னல்களுக்கு இடையே மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள், தங்கள் உயிர், உடைமைகளை இழக்கும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது.

கடந்த மாதம் மீன்பிடிக்கச் சென்ற ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 40 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடித்துச் செல்லப்பட்டனர்.

மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கையால் இவர்கள் அனைவரும் கடந்த வாரம் விடுதலை செய்யப்பட்டு, நேற்று முன்தினம் விமானம் மூலம் சென்னை வந்தனர்.

ஆனால், மீனவர்கள் சென்ற படகுகள் விடுவிக்கப்படாமல், அவை இலங்கை அரசுக்கு உடைமையானதாக அறிவிக்கப்பட்டது.

இது போன்று அரசுடமை ஆக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளை ஏலம்விட்டு அழிக்கவும் இலங்கை அரசு திட்டமிட்டிருக்கிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் தமிழக மீனவர்கள், கச்சத்தீவுப் பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையை மீட்டுத்தரக் கோரி நாளை மறுநாள் (23-ம் தேதி) படகுகளில் கறுப்புக்கொடி கட்டி தங்கள் குடும்பத்துடன் கச்சத்தீவு செல்லும் போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள்.

இதற்கிடையே கடந்த 18-ம் தேதி, புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து பிரான்சிஸ் கோவா என்பவரது விசைப்படகில் தங்கச்சிமடத்தை சேர்ந்த மெசியா (30), மண்டபத்தை சேர்ந்த சாம் (28), உச்சிப்புளியைச் சேர்ந்த நாகராஜன் (52), செந்தில்குமார் (32) ஆகியோர் மீன்பிடிக்கச் சென்றனர். அன்று பகலில் அவர்களது படகைச் சிறைபிடித்த இலங்கை கடற்படையினர், தங்கள் கப்பலின் அருகாமையில் மீன்பிடிப் படகை நிறுத்திவைத்துள்ளனர்.

கடல் சீற்றத்தால் அந்தப் படகின் பின்பகுதி இலங்கைக் கடற்படை கப்பலின் மீது மோதியதில், சேதம் அடைந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த இலங்கைக் கடற்படையினர் மீனவர்களைத் தாக்கியதுடன், மாற்றுக் கப்பலைக் கொண்டு மீன்பிடிப் படகைத் தாக்கி மூழ்கடித்தனர். இதனால், படகிலிருந்த மீனவர்களின் நிலை என்னவென்று தெரியாமல்போனது.

இதையடுத்து கோட்டைபட்டினத்திலிருந்து மூன்று படகுகளில் மாயமான மீனவர்களைத் தேடிச் சென்றனர். அவர்களுடன் இந்திய கடலோரக் காவல் படையும் சென்றிருந்தது. இந்தநிலையில், இந்திய எல்லையிலேயே இலங்கைக் கடற்படையினர் காத்திருக்கவைத்தனர்.

பல மணி நேரம் காத்திருந்த நிலையில் தேடிச் சென்ற மீனவர்கள் மற்றும் கடலோரக் காவல்படையினரைத் திரும்பிச் செல்லும்படி இலங்கை கடற்படையினர் கூறியுள்ளனர். இதனால் மீனவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் அவர்கள் கரை திரும்பினர்.

இந்தநிலையில் மாயமான மீனவர்களில் இருவரது உடல்கள் நேற்று மாலை கரை ஒதுங்கியதாக இலங்கைக் கடற்படையினர் தெரிவித்தனர்.

இதனால், மேலும் இரண்டு மீனவர்களும் உயிரிழந்திருக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்திருக்கிறது. மீட்கப்பட்ட மீனவர்களின் உடல்களில் காயங்களும் காணப்படுவதால், இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலில் சிக்கி இவர்கள் பலியாகியிருக்கலாம் என மீனவர்கள் கூறுகின்றனர்.

இலங்கைக் கடற்படையினரின் இந்த அத்துமீறலைக் கண்டித்தும், அவர்கள்மீது கொலை வழக்கு பதிவதுடன் இலங்கையிலுள்ள மீனவர்களின் உடலை இந்தியாவுக்குக் கொண்டு வந்து உடற்கூறு ஆய்வு நடத்த வலியுறுத்தியும் கோரி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் குடும்பத்துடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மீனவர் சங்கத் தலைவர்கள் சேசுராஜ், எமரிட், சகாயம், சின்னத்தம்பி மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆகியோர் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீருடன் பங்கேற்றனர்.

பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு இந்திய மீனவர்கள்மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்துவதில்லை எனக் கூறப்பட்டுவந்த நிலையில், இலங்கைக் கடற்படையினர் தாக்குதலில் நான்கு மீனவர்கள் உயிரிழந்த சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.