முப்பது வெளிநாட்டவர்கள் உட்பட 268 பேர் கொல்லப்பட்ட, 27 வெளிநாட்டவர்கள் உட்பட 594 பேர் காயமடைந்த, உயிர்த்த ஞாயிறு தினத்தின் தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுவருவதாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
8 இடங்களில் நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் சம்பவம் தொடர்பிலான குற்றவியல் விசாரணைகள் பெரும்பாலும் நிறைவடைந்துள்ளதாக கூறிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, முழு பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பிலும் இடம்பெறும் ஆழமான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.
அதன்படி இந்த பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் மொத்தமாக 268 சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக குறிப்பிட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன அதில் 195 பேர் தற்போது விளக்கமறியலில் உள்ளதாக கூறினார்.
ஏனைய 73 பேரும் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் இடம்பெறும் பிரதான விசாரணைகளை முன்னெடுக்கும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரின் பொறுப்பில், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் கூறினார்.
முன்னதாக கொழும்பு, நீர் கொழும்பு மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி 8 தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் பதிவாகின.
கரையோர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, கட்டான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கட்டுவபிட்டி – புனித செபஸ்டியன் தேவாலயம், மட்டக்களப்பு புனித சியோன் தேவாலயம் ஆகிய கிறிஸ்தவ தேவாலயங்களும் கொழும்பு காலி முகத்திடலுக்கு சமீபமாகவுள்ள ஷங்கிரில்லா, சினமன் கிராண்ட், கிங்ஸ்பெரி ஆகிய ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றன.
மேற்படி ஆறு தாக்குதல்களும் இடம்பெற்றது ஏப்ரல் 21 ஆம் திகதி காலை 8.45 மணிக்கும் 9.30 மணிக்கும் இடையிலான 45 நிமிட இடைவெளியிலேயே ஆகும்.
அதே தினம் பிற்பகல் 1.45 மணியளவில் தெஹிவளை பொலிஸ் பிரிவின் மிருகக்காட்சி சாலைக்கு முன்பாக உள்ள ‘ நியூ ட்ரொபிகல் இன்’ எனும் சாதாரண தங்கு விடுதி கொண்ட ஹோட்டலில் குண்டு வெடிப்புச் சம்பவம் பதிவானது. அதனைத் தொடர்ந்து பிற்பகல் 2.15 மணியளவில், குண்டுவெடிப்புடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேக நபர்கள் தொடர்பிலான விசாரணைக்கு சென்ற கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளை இலக்கு வைத்து தெமட்டகொட மஹவில கார்டின் பகுதி சொகுசு வீட்டில் பெண் தற்கொலை குண்டுதாரியினால் தாக்குதல் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.