காத்தான்குடியின் 10 கிராம சேவகர் பிரிவுகள் 40 நாட்களின் பின்னர் விடுவிப்பு

காத்தான்குடியில் உள்ள 10 கிராம சேவகர் பிரிவுகள் சுமார் 40 நாட்களின் பின் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், அப்பகுதிகளில் இன்று வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் 31ம் திகதி முதல் மூடக்கப்பட்டிருந்த காத்தான்குடி நகரின் 10 கிராம சேவகர் பிரிவுகளிலும் வர்த்தக நிலையங்கள் இன்று காலை முதல் திறக்கப்பட்டுள்ளன.

கடந்த டிசம்பர் மாதம்  31 ம் திகதி முதல் கொரோனா பரவல் அதிகரிப்பை அடுத்து, காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவின் 18 கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தது.

தொடர்ந்தும் கடந்த 40 நாட்களாக 10 கிராம சேவகர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் சட்டம் அமுலில் இருந்தது. இன்று 9ம் திகதி முதல் 4 வீதிகளைத் தவிர 10 கிராமவேசகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுவதாக மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் அறிவித்ததையடுத்து,  இன்று காலை முதல் வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டிருந்ததுடன் பாடசாலைகள் பள்ளிவாசல்கள் என்பனவும் திறக்கப்பட்டன. இத்துடன் வழமையான அலுவல்களும் இடம்பெற்று வருகின்றன.