கூட்டமைப்போடு எந்த விடயத்திலும் இணைந்து செயற்படமாட்டோம் – கஜேந்திரகுமார்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இனிவரும் காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்த விடையத்திலும் இணைந்து செயல்படாது என கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை  தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நீண்ட காலமாக தமிழ் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று பாராளுமன்றம் சென்று வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பானது கடந்த தேர்தலின் போது சிறிய ஆட்டம் கண்டிருந்த நிலையிலும் கூட தற்போதைய அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு  இலங்கைக்கு எதிரான  பிரேரணைக்கு கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் ஆதரித்து கையொப்பமிட்டு அரசுக்கு  ஆதரவு வழங்கியுள்ளார்.

போருக்கு பின்னர் அதுவும் இன அழிப்பு இடம்பெற்ற பின்னரும் பாதிக்கப்பட்ட மக்கள் நடைபெற்ற இன அழிப்பு இன்னும் இடம்பெறாது இருப்பதற்காக பொறுப்புக்கூறல் நடைபெற வேண்டும்.

சர்வதேச ரீதியில் அதிலும் பூகோள அடிப்படையில் கிடைத்துள்ள வாய்ப்புக்களை பயன்படுத்தியாவது பொறுப்புக்கூறலை செய்ய வேண்டும், என்ற  அடிப்படையில் பல போராட்டங்கள் தொடர்சியாக இடம்பெற்று வருகின்ற நிலையில் மக்களால் தெரிவு செய்யப்பட்டதாக கூறிக்கொள்ளும் கூட்டமைப்பு அந்த மக்களின் எதிர்பார்ப்புக்கு நேர்மாறாக செயற்பட்டு வருகிறது.

இது தமிழ் மக்கள் மீது மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பு முதுகில் குத்திய ஒரு செயற்பாடாகும். எனவே இவ்வாறான தமிழ் தேசிய கூட்டமைப்போடு ஒற்றுமையை வலியுறுத்துவதற்காக அனைத்து கட்சியையும், இணைப்பதாக  இனி எந்த சிவில் சமூகத்தினரோ மதகுருமாரோ முன் வர வேண்டாம்.

எனவே அவ்வாறான முயற்சிகளை கைவிட வேண்டும் அத்தோடு நாமும் பாராளுமன்றத்தில் அல்லது வேறு செயற்பாடுகளிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இனிவரும் காலத்தில் இணைந்து பயணிக்க மாட்டோம் என்றார்.