அநுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்ட ஆவணங்களை மீண்டும் யாழிற்கு கொண்டுவர-சிங்கள அமைச்சர் உறுதி

கடுமையான எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் தமிழர் தாயகத்தின் வட மாகாணத்திற்குரிய அனைத்து காணிகளுக்கான ஆவணங்களும் அநுராதபுர மாவட்ட செயலகத்திற்கு அண்மையில் எடுத்துச் செல்லப்பட்டிருந்தன.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் தற்போது இடம்பெற்று வரும் கலந்துரையாடலில் வைத்து அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதன்போது விரைவாக செயற்பட்ட அமைச்சர் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் இது தொடர்பில் பேசிய நிலையில் குறித்த ஆவணங்கள் அனைத்தும் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கே கொண்டுவரப்பட நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதியளித்துள்ளார்.

முதலாம் இணைப்பு – அமைச்சரின் பங்குபற்றுதலுடன் யாழில் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சி திட்டம்

கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சி திட்டம் இன்று காலை 9.00 மணி முதல் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெறுகின்றது.

இந்த நிலையில் குறித்த நிகழ்ச்சித் திட்டத்தில் கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும் யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ளஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

அப்பகுதியிலுள்ள விவசாயம், யானைகள் மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் புகுதல், சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.