3,500 பில்லியன் டொலரை திரட்டிக்கொள்வது தொடர்பான முன்மொழிவுகளை இரண்டாவது அறிக்கையில் முன்வைக்க நடவடிக்கை – சம்பிக்க

2023ஆம் ஆண்டு எதிர்பார்க்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் 3500 பில்லியன் டொலரை திரட்டிக் கொள்வது தொடர்பான முன்மொழிவுகளை இரண்டாவது அறிக்கையில் முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொருளாதார ஸ்தீரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காணும் தேசிய சபையின் உப குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டு அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பது தொடர்பான விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக உள்நாட்டு இறைவரி திணைக்களம்,இலங்கை சுங்கத் திணைக்களம் மற்றும் இலங்கை மதுவரித் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் நேற்று முன்தினம் தேசிய சபையின் உபகுழுவில் முன்னிலையாகினர்.

நாடு பொருளாதார ரீதியில் வங்குரோத்து நிலை அடைவதற்காக காரணங்கள் என்ன? 2019 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அமுல்படுத்தப்பட்ட வரித் திருத்தங்கள் காரணமாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் காணப்பட்ட வரிக் கோப்புக்களின் எண்ணிக்கை 14 இலட்சத்திலிருந்து 5 இலட்சம் வரை குறைவடைந்தமை மற்றும் அதனால் அரசாங்கத்திற்கு இழக்கப்பட்ட வரி வருமானம் குறித்தும் இங்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டிற்குள் மேற்கொள்ளப்படும் உத்தியோகப்பூர்வ பதிவுகள் அற்ற அதாவது வைத்தியர்களுக்கான கட்டணம், சட்டத்தரணிகள் கட்டணம், மேலதிக வகுப்புக் கட்டணங்கள் ஆகியற்றுக்கான  கொடுப்பனவுகள் அதிகளவு பணம் புழக்கத்தில் இருப்பதாகவும் இவற்றுக்காக வரியை அறவிடுவது தொடர்பில் உரிய பொறிமுறை தயாரிக்கப்பட வேண்டும் என்று இந்த கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

உலக ஒருமைப்பாடு குறித்த வருடாந்த அறிக்கை சுட்டிக்காட்டல்களுக்கு அமைய இலங்கையில் ஏற்றமதி மற்றும் இறக்குமதி செயற்பாடுகளில் அதிக விலைகள் காண்பிக்கப்படுவது அல்லது குறைந்த விலைகள் காண்பிக்கப்படுவது போன்று விமானம் மூலம் அல்லது கப்பல்கள் மூலம் நாட்டிலிருந்து பெருமளவிலான செல்வம் வெளிச்செல்வதாக தேசிய உப குழுவின் தலைவல் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

மின்சாரப் பட்டியல்,தொலைப்பேசிப் பட்டியல்,மற்றும் வாகன உரிமைப் பத்திரம் போன்ற புறநிலைக் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு வரி அறவிடும் பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டில் எதனோல் அதிகமாகக் காணப்படுவதாகவும் இந்தத் தொகையை ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

தென்னங்க கள்ளு மற்றும் கித்துல் கள்ளு, ஆகியவற்றை கனடாவுக்கு ஏற்றுமதி செய்ய ஏற்கெனவே நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக இலங்கை மதுவதித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.

தங்கம்,பணம்,கொடுப்பனவுகள்,பாதுகாப்புக் கடன்கள்,ஏற்றுமதி மற்றும் இறக்குமதி, சொத்துக்களைப் பரிமாற்றல் போன்ற துறைகள் குறித்த செயற்பாடுகளை நிர்வாகம் செய்வதற்கு அனுமதி வழங்கல் மற்றும் கட்டுப்படுத்த அனுமதி வழங்கப்பட்டன.

1953 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க பரிவர்த்தனைக் கட்டுப்பாட்டு சட்டத்தை இரத்துச் செய்து இதற்குப் பதிலாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 2017 ஆம் ஆண்டு இலக்க அந்நியச் செலாவணிச் சட்டத்தில் தங்கம் நீக்கப்பட்டமையால் தங்கம் நகைகளாக எந்தவித கொடுப்பனவுகளும் இன்றி நாட்டுக்குள் கொண்டு வரப்படுவது பாரிய பிரச்சினையாகும் என சுட்டிக்காட்டப்பட்டது.