மன்னார் பூநகரியை சுற்றியுள்ள கடற்பகுதியில் காற்றாலைகளை பயன்படுத்தி 30,000 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என இந்திய மின்சார அமைச்சு அண்மையில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த காற்றாலை மின்சாரம் நமது நாட்டிற்கு அன்னியச் செலாவணியை ஈட்டித் தரக்கூடிய பெரும் செல்வம் என ஆய்வுகளை மேற்கொண்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தியப் பகுதியில் காற்றாலை மின் நிலையங்கள் அமைப்பதற்கான அடிப்படைப் பணிகளை அந்நாடு ஏற்கெனவே தயாரித்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவின் முன்னணி எரிசக்தி உற்பத்தியாளர்களில் ஒருவரான அதானி, தாங்கள் தொடங்கவிருக்கும் காற்றாலை மின் திட்டம் தொடர்பாக பல முன்னணி நிறுவனங்களால் இந்த பிராந்தியத்தில் ஆராய்ச்சியும் நடத்தியது.
தற்போது இலங்கையின் நாளாந்த மின்சார உற்பத்தி திறன் சுமார் 4300 மெகாவோட்களாகும். இப்பகுதியில் உள்ள ஆழம் குறைந்த கடலில் கட்டப்படும் காற்றாலை மின் நிலையங்களில் இருந்து ஏழு மடங்கு அதிக ஆற்றலை உற்பத்தி செய்து, அதிகப்படியான உற்பத்தியை சர்வதேச அளவில் விற்பனை செய்து பெரும் டொலர் வருமானம் பெற முடியும் என ஆய்வு அறிக்கை கூறுகிறது.
இந்தியாவைத் தவிர, ஜப்பானும் இந்த அறிக்கையை ஆய்வு செய்து எதிர்காலத்தில் தகுந்த முதலீட்டு திட்டங்களை முன்வைக்க திட்டமிட்டுள்ளதாக தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.