தன்னை பதவி விலகுமாறு கோர முடியாது!–ஆயுள் கால அரசியலுக்கு சம்பந்தன் தயார்

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தன்னை பதவி விலகுமாறு மத்திய குழுவினால் கோர முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்  இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் செயற்படாத நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள சம்பந்தனை பதவி விலக்கி, அப்பதவிக்கு வல்லமையுள்ள ஒருவரை நியமிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை இரா.சம்பந்தன் நிராகரித்துள்ளதாக நேற்று (11.12.2022) நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து சம்பந்தனுடன் பேசுவதற்கு மாவை சேனாதிராசா, சீ.வீ.கே.சிவஞானம், எம்.ஏ.சுமந்திரன், ப.சத்தியலிங்கம் ஆகியோர் அடங்கிய 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருகோணமலை மக்கள் அளித்த ஆணையின் பிரகாரமே தான் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதாக சம்பந்தன் தெரிவித்துள்ளார் என மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்.

 

ஆகவே மத்தியக்குழுவினால் தன்னை பதவிவிலக கோர முடியாதென அவர் பதிலளித்தாகவும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.