இந்திய,சீன உளவுத்துறை அரசியலில் சிக்கியுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் இந்திய-சீன புவிசார் அரசியலில் சிக்கியுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,

நாட்டில் நடைபெற்று வரும் இந்தோ-சீனா புவிசார் அரசியல் போராட்டம் வடக்கில் உள்ள பல்கலைக்கழக வளாகங்களிலும் நுழைந்துள்ளதாக தெரிகிறது.

இந்தியாவும் சீனாவும் சமீப காலங்களில் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் வணிக முயற்சிகள் மூலம் வடக்கு பிராந்தியத்தில் கால் பதிக்க முயற்சிப்பது அனைவருக்கும் தெரிந்த இரகசியம்.

வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் வணிக முயற்சிகள்

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம், உள்ளூர் பங்காளிகளுடன், உள்ளூர் கர்நாடக இசைக் கலைஞர்களுக்காக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மூன்று நாள் இசை விழாவை அண்மையில் ஏற்பாடு செய்தது.

அதேநேரம் கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்துடன் நெருக்கமாகப் பணியாற்றிய பெல்ட் அண்ட் ரோட் இன்ஷியேட்டிவ் ஸ்ரீலங்கா என்ற நிறுவனம், இலங்கைக்கு சிறந்த எதிர்காலம் என்ற தலைப்பில் மூன்று நாள் கருத்தரங்கில் கலந்துகொள்ள பல்கலைக்கழக மாணவர்களை அழைத்ததாக மாணவர் தரப்பு தெரிவித்துள்ளது.

ஐந்து பொருளியல் இளங்கலை பட்டதாரிகள் பங்கேற்பாளர்களாக தெரிவு செய்யப்பட்டனர் மற்றும் ஏனைய மாணவர்களும் கொழும்பில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொள்ள ஊக்குவிக்கப்பட்டனர் என்று குறித்த செய்தித்தாளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.