தேர்தலை பிற்போட ஆணைக்குழுவிடம் மன்றாடுகிறது அரசு – கிரியெல்ல

2023ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தில் அரச செலவுகளுக்காக 7,900 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபாவை ஏன் செலவு செய்ய முடியாது.

தேர்தலை பிற்போட அரசாங்கம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் மன்றாடுகிறது உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஊடாக ரணில் – ராஜபக்ஷர்களின் முடிவு ஆரம்பமாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

கண்டியில் திங்கட்கிழமை (டிச. 26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் என பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறோம். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இரண்டு ரிட் மனுக்கல் எதிர்வரும் மாதம் 18ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

நீதிமன்றத்தின் மீது முழுமையான நம்பிக்கை எமக்கு உள்ளது. வாக்குரிமை என்பது மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று ஆகவே தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் 2017 மற்றும் 2028ஆம் ஆண்டு காலப்பகுதியில் தீர்ப்பளித்துள்ளது.

நகர மற்றும் பிரதேச சபை சட்டத்தின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி நடத்துவது கட்டாயமாகும். தேர்தலை பிற்போடுவதற்கான உரிய காரணம் ஏதும் அரசாங்கத்திடம் கிடையாது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இம்மாத (டிசெம்பர்) இறுதியில் அறிவிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கடந்த மாதம் தெரிவித்தார்.

ஆனால் தற்போது அடுத்த மாதம் முதல் வாரத்தில் வேட்புமனு தாக்கல் தொடர்பான உத்தியோகப்பூர்வமான தீர்மானம் அறிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். இம்மாத இறுதி பகுதி,அடுத்தமாதம் முதல் வாரம் வரை பிற்போடப்பட்டுள்ளமைக்கான காரணத்தை இதுவரை ஆணைக்குழு அறிவிக்கவில்லை என்றார்.