19 வயதின்கீழ் மகளிர் இருபது20 உலகக் கிண்ண இறுதிப் போட்டி இன்று: இந்தியா – இங்கிலாந்து மோதல்

19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான ஐசிசி இருபது20 கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்தியா, இங்கிலாந்து அணிகள் இப்போட்டியில் மோதவுள்ளன.

முதல் தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டி தென் ஆபிரிக்காவில் நடைபெறுகிறது.

16 அணிகள் பங்குபற்றி இச்சுற்றுப்போட்டியின் அரை இறுதிப் போட்டிகள் நேற்றுமுன்தினம் நடைபெற்றன.

முதலாவது அரை இறுதிப் போட்டியில் நியூ ஸிலாந்தை இந்தியா 8 விக்கெட்களால் வென்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய நியூ ஸிலாந்து, 9 விக்கெட் இழப்புக்கு 107 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 14.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 110 ஓட்டங்களைப் பெற்றது.

இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை இங்கிலாந்து 3 ஓட்டங்களால் வென்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 19.5 ஓவர்களில் 99 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 18.4 ஓவர்களில் 96 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது.

இந்தியா, நியூ ஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி பொச்சேவ்ஸ்ட்ரூம் நகரில் இலங்கை, இந்திய நேரப்படி மாலை 5.15 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

பெண் மத்தியஸ்தர்கள்

இந்த இறுதிப் போட்டிக்கு முற்றிலும் பெண்களைக் கொண்ட மத்தியஸ்தர்கள் குழாமை ஐசிசி அறிவித்துள்ளது. போட்டியின் பொது மத்தியஸ்தராக இலங்கையரனா வனேசா டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

கள மத்தியஸ்தர்களாக மேற்கிந்தியத் தீவுகளின் கென்டேஸ் லா போர்ட், ஸிம்பாப்வேயின் சாரா தம்பனேவானா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொலைக்காட்சி மத்தியஸ்தராக இலங்கையின் தெதுனு டி சி;வாவும், 4 ஆவது மத்தியஸ்தராக அவுஸ்திரேலியாவின் லிசா மெக்கேய்ப்பும் நியமிக்கப்பட்டுள்ளனர்.