பொருளாதார நெருக்கடி வெகுவிரைவில் எரிமலை போல் வெடிக்கும் – நாலக கொடஹேவா

ரணில் – ராஜபக்ஷ அரசாங்கத்தினால் பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது. கடன் பெறல், இருக்கும் வளங்களை விற்றல் ஆகியவை ஜனாதிபதியின் பொருளாதார கொள்கையாக உள்ளது.

பொருளாதார நெருக்கடி வெகு விரைவில் எரிமலை போல் வெடிக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.

சுதந்திர மக்கள் கூட்டணியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை வெளியிடும் நிகழ்வு நேற்று (27) வெள்ளிக்கிழமை பத்தரமுல்ல பகுதியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது,

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நல்லாட்சி அரசாங்கத்தில் அமுல்படுத்திய தவறான பொருளாதார கொள்கையை தற்போதும் அமுல்படுத்துகிறார். நல்லாட்சி அரசாங்கத்தில் பொருளாதார கொள்கையை 69 இலட்ச மக்கள் புறக்கணித்து 2019ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பொருளாதார கொள்கையை நாட்டில் ஒருபோதும் நிறைவேற்ற முடியாது என ஜனாதிபதி தேர்தல் காலத்தில் எம்மிடம் குறிப்பிட்டவர் 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் ஜனாதிபதியின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்திய பொருளாதார கொள்கை அரசாங்கத்தினால் செயற்படுத்தப்படவில்லை.

மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் பொருளாதார கொள்கை செயற்படுத்தப்பட்டது. பல்வேறு நெருக்கடிக்குள்ளான மக்கள் இறுதியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.

69 இலட்சமாக புறக்கணிக்கப்பட்ட பொருளாதார கொள்கை மீண்டும் துரதிர்ஷ்டவசமாக அமுல்படுத்தப்பட்டது.

வரி அதிகரிப்பு, கடன் பெறல் மற்றும் மிகுதியாக இருக்கும் தேசிய வளங்களை விற்றல் ஆகியன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரதான பொருளாதார கொள்கையாக உள்ளது.

அரசாங்கத்தின் வரி சீர்திருத்தங்களினால் மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். ரணில் – ராஜபக்ஷர்களினால் பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது.

பொருளாதார பாதிப்பு வெகு விரைவில் எரிமலை போல் வெடிக்கும். பலவீனமான அரசாங்கத்தை மாற்றியமைத்தால் தான் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும். உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் அரசாங்கத்தின் முடிவு ஆரம்பமாகும் என்றார்.