வெளிநாடுகளின் பின்னணியில் உருவாக்கப்பட்ட ஜனாதிபதியும் பிரதமரும்! பகீர் தகவலை வெளியிட்ட தயாசிறி

வெளிநாட்டு சக்திகளின் பின்னணியிலேயே, கடந்த 2015ஆம் ஆண்டு முதல் நாட்டில் ஜனாதிபதிகள், அரசாங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் நேற்று செவ்வாய்க்கிழமை முதன் முறையாக சாட்சியமளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு வேறு ஒரு ஜனாதிபதியை நியமிக்க வேண்டிய தேவை யாருக்கு இருந்தது எனவும் இதனையும் இவ்வாணைக் குழு தேடிப் பார்க்க வேண்டும் எனவும் அவர் தொடர்ந்தும் சாட்சியமளிக்கையில் தெரிவித்தார்.

21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்களை மையப்படுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க விசாரணை ஆணைக் குழுக்கள் சட்டத்தின் (393 ஆம் அதிகாரம்) 2 ஆம் அத்தியாயத்தின் கீழ் கடந்த 2019 செப்டம்பர் 21 ஆம் திகதி நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் சாட்சி விசாரணைகள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக் குழுவில் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், சாட்சிகளின் இடையே, கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்குள் நுழைந்த குண்டுதாரி அங்கு தாக்குதல் நடாத்தாமை, அந்த ஹோட்டலில் விஷேடமான சிலர் தங்கியிருந்ததன் எதிரொலியாகும். தாக்குதலின் பின்னர் வெளிப்படுத்திய கருத்து தொடர்பில் ஆணைக்குழு உறுப்பினர் மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்ன கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் தயசிறி ஜயசேகர குறிப்பிடுகையில்,

அங்கு சிலர் தங்கியிருந்தனர் என்பதைவிட, ஏன் அந்த ஹோட்டலில் தாக்குதல் நடாத்தப்படவில்லை என்பதையே நான் சிந்தித்தேன். குண்டுதாரி ஹோட்டலுக்குள் சென்று மீண்டும் திரும்பி வந்தார். இந்த ஹோட்டலுடன் ஒரு நாடும், அந் நாட்டின் வர்த்தகரும் தொடர்புபட்டுள்ளமையை நீங்களும் அறிவீர்கள். அதனால் இது தொடர்பில் தேடிப் பார்க்குமாறு பொலிஸாருக்கு கூறினோம்.

திடீர் என நாமல் குமார என ஒருவர் முளைக்கின்றார். அவர் ஆட்சியில் உள்ள ஜனாதிபதியையும், ஜனாதிபதியாகலாம் என எதிர்ப்பார்க்கப்பட்ட நபரையும் கொலை செய்ய திட்டமொன்று உள்ளதாக கூறும் அளவுக்கு நாடு அராஜக நிலைக்கு சென்றது எப்படி என்பதை தேடிப் பார்க்க வேண்டும்.

சஹ்ரானின் பின்னணியில் இருந்துகொன்டு அவரை நெறிப்படுத்தியவர் யார், ஏதேனும் நோக்கத்துக்காக சஹ்ரான் யாரோ ஒரு தரப்பினரால் பயன்படுத்தப்பட்டுள்ளாரா என்பதை தேடிப் பார்க்க வேண்டும்.

நாட்டில் தேசிய உளவுப் பிரிவுகளை விட, இந் நாட்டில் தாக்குதல் இடம்பெறப்போவது, அதற்கான இடம், அது தொடர்பிலான நேரம் வெளிநாட்டு உளவுத் துறையொன்றால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனூடாக இந்திய உளவுத்துறை இந் நாட்டில் எந்தளவு தூரம் செயற்பட்டுள்ளது என்பதை அறிய முடிகின்றது. எமக்கு தெரிந்தது இந்திய உளவுத்துறை மட்டும். இவ்வாறே எமக்கு தெரியாமால் எமது நாட்டில் எத்தனை வெளிநாட்டு உளவுச் சேவைகள் செயற்படுகின்றன. இவை கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்கள்.

இவ்வாறான நிலைமை எதிர்காலத்திலும் தொடருமானால், குண்டு வெடிப்புக்கள் மூலம் எத்தனை அரசாங்கங்கள் கவிழ்க்கப்படும் என்பது தெரியாது. சஹ்ரான் மட்டுமல்ல, சில குறைப்படுகள் இருப்பினும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி, முன்னாள் பிரதமர் ரணில், முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோர் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒருவகையில் பாதிக்கப்பட்டவர்களாகவே நான் பார்க்கின்றேன். அரசியல்வாதியாகவும், சட்டத்தரணியாகவும் நான் அனைத்து விடயங்களையும் ஆராய்ந்த நிலையிலேயே இந்த விடயம் தொடர்பில் இங்கு குறிப்பிடுகிறேன்.

இந்த தாக்குதல் குறித்த விசாரணைகள் முறையாக இடம்பெறவில்லை என ரஞ்சித் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கூறுவது கூட அத்தகைய நிலைமைகள் அவதானத்துக்கு உட்படாமையை சுட்டிக்காட்டுவதாக இருக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதனைவிட 2015ஆம் ஆண்டின் பின்னர் தானும் அமைச்சரவையில் அமைச்சராக இருந்ததாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, தேசிய பாதுகாப்பு விடயத்தில் சில குறைப்பாடுகள் இருந்ததாக ஒப்புக்கொண்டார்.

ஜெனீவா ஒப்பந்ததில் கைச்சாத்திட்டமைக்கு எதிராக அரசாங்கத்தில் இருந்துகொண்டே நாம் எதிர்த்தோம். ஜனாதிபதிக்கு அப்போது தேசிய பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய தேவை இருந்தது. எனினும் அரசாங்கத்தின் மறு தரப்பினருக்கு அந்த அவசியம் இருக்கவில்லை.’ என ஆணைக் குழுவின் தலைவர் ஜனக் டி சில்வாவின் கேள்விக்கு இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர பதிலளித்துள்ளார்.

ஆணைக் குழுவின் தலைவர் மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி ஜனக் டி சில்வாவின் தலமையிலான மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்ன, ஓய்வுபெற்ற நீதிபதிகளான நிஹால் சுனில் ராஜபக்ஷ, அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சு செயலர் டப்ளியூ.எம்.எம். அதிகாரி ஆகியோர் முன்னிலையில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.