இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் தீர்மானம்

இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்களை இந்த நாட்டுக்கு அழைத்து வர வேண்டிய அவசியம் இதுவரை ஏற்படவில்லை என்றும் இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்களிடம் இருந்து இதுவரையில் அவ்வாறான கோரிக்கை விடுக்கப்படவில்லை எனவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், எந்தவொரு நபரும் இலங்கைக்கு வர விரும்பினால் அதற்குத் தேவையான வசதிகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இஸ்ரேலில் காணாமல் போனதாகக் கூறப்படும் இலங்கைப் பெண் உயிரிழந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா கருத்து வெளியிட்டார்.

“இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு வெளிவிவகார அமைச்சு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி அறிவித்திருந்தார். அங்கிருந்து வர விரும்பும் குழுவினர் தொடர்பில் எவ்வித தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை. எனினும் அவ்வாறான தேவை இருந்தால் நடவடிக்கை எடுப்போம் . இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து, அவ்வப்போது தூதரகத்துடன் தகவல்களை பரிமாறிக்கொள்ளவும்.பயப்பட வேண்டாம்.தூதரகம் மற்றும் பொறுப்பான ஊடகங்கள் வழங்கும் தகவல்களை எப்போதும் நம்புங்கள்.

இரண்டு இலங்கையர்கள் நேற்று காணாமல் போயுள்ளனர். மேலும், நேற்று மாலை ஒரு பெண் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பார்த்தோம். ஒருவர் இறந்துவிட்டார் என்பதை உறுதிப்படுத்த ஒரு முறை உள்ளது. தூதரக அதிகாரிகள் சடலத்தைப் பார்க்க வேண்டும் . காஸா பகுதியில் நடந்து வரும் போர் காரணமாக, அந்த பகுதிகளுக்கு தூதர்கள் செல்ல முடியாது. அவர்கள் அந்தப் பகுதிக்குச் சென்று உறுதி செய்ய வேண்டும். அதுவரை இந்த இலங்கையர் காணாமல் போனவராகவே கருதப்படுவார் ” என அவர் தெரிவித்துள்ளார்.