எனது தலைமைத்துவத்தில் பொதுஜன பெரமுன தேசிய தேர்தல்களில் போட்டியிடும் – மஹிந்த ராஜபக்ஷ

அரசியலமைப்பின் பிரகாரம் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நிச்சயம் இடம்பெறும்.எனது தலைமைத்துவத்தில் பொதுஜன பெரமுன தேசிய தேர்தல்களில் போட்டியிடும்.தேர்தலில் இரண்டு பிரதான கட்சிகளுக்கிடையே போட்டி நிலவும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இஸ்ரேல் – பலஸ்தீனம் மோதல் தொடர்பில் கொழும்பில் உள்ள பலஸ்தீனத்துக்கான தூதுவரை திங்கட்கிழமை (16) நேரில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கேள்வி – ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்படுகிறதே ?

பதில் – அரசியலமைப்பின் பிரகாரம் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நிச்சயம் இடம்பெறும்.

கேள்வி – புதிய அரசியல் கட்சிகள் தோற்றம் பெற்றுள்ளமை பற்றி உங்களின் நிலைப்பாடு என்ன ?

பதில் – தேர்தல் ஒன்று இடம்பெறும் காலத்தில் புதிதாக அரசியல் கட்சிகள் தோற்றம் பெறுவது இயல்பானதே. ஆனால் தேர்தலில் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளுக்கு இடையில் தான் போட்டி இருக்கும்.

கேள்வி –பொதுஜன பெரமுன தேர்தலுக்கு தயாரா ?

பதில் – நாங்கள் தேர்தலுக்கு என்றும் தயாராக உள்ளோம். வெகுவிரைவில் தேர்தலை நடத்த வேண்டும் என்பதற்கான நகர்வுகளை தற்போது முன்னெடுத்துள்ளோம்.

கேள்வி – எவரது தலைமைத்துவத்துடன் பொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடும் ?

பதில் – எனது தலைமைத்துவத்துடன் பொதுஜன பெரமுன பலமான முறையில் எதிர்வரும் தேசிய தேர்தல்களில் போட்டியிடும்.

கேள்வி- பொதுஜன பெரமுனவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை என்று மக்கள் விடுதலை முன்னணியினர் குற்றஞ்சாட்டுகின்றனரே ?

பதில் – மக்கள் விடுதலை முன்னணியினர் குற்றஞ்சாட்டுவது ஒன்றும் புதிய விடயமல்ல, அவர்களின் குற்றச்சாட்டுக்கு முரணாகவே வாக்குகள் காணப்படுகிறது. ஆகவே அவர்களின் குற்றச்சாட்டுகள் குறித்து அவதானம் செலுத்த வேண்டிய தேவையில்லை என்றார்.