புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 45 நாட்களுக்குள் வெளியிடப்படும் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் 45 நாட்களுக்குள் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐந்தம் தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை எவ்வித பிரச்சினைகளும் இன்றி நிறைவடைந்துள்ளது. இப்பரீட்சைக்காக 2888 பரீட்சை நிலையங்கள் நாடளாவிய ரீதியில்அமைக்கப்பட்டிருந்தன. 335,956 பேர் இம்முறை பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர்.

சீரற்ற காலநிலை உள்ளிட்ட பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர். மாறாக வேறு ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தால் அவை தொடர்பில் பரீட்சை நிலைய பொறுப்பதிகாரிகளிடம் அறிக்கையைப் பெறுவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வழமையாக புலமைப்பரிசில் நிறைவடைந்ததன் பின்னர் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை முன்னெடுப்பதற்கு 40 – 45 நாட்கள் செல்லும். எனினும் இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளுக்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எவ்வாறிருப்பினும் 45 நாட்களுக்குள் புலமைப்பரிசில் பெறுபேறுகளை வெளியிட முடியும் என்று நம்புகின்றோம் என்றார்.