ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் களமிறங்கும் ராஜபக்சக்கள்: வேட்பாளர் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச களமிறங்கவுள்ளதாக அந்த கட்சியின் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பான அறிவிப்பை கட்சி விரைவில் மேற்கொள்ளுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல்
இலங்கையில் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தல்களும் நடைபெறும் என ரணில் விக்ரமசிங்க அண்மையில் கூறியிருந்தார்.

இதனை தொடர்ந்து, இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகள் தங்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான அறிவிப்புக்களை மேற்கொண்டு வருகின்றன.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கட்சியின் சில உறுப்பினர்கள் தனிப்பட்ட ரீதியில் கருத்துகளை வெளியிட்டிருந்தாலும், கட்சி என்ற வகையில் இது தொடர்பான எந்தவொரு தீர்மானமும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

வேட்பாளர் பட்டியல்
இந்த நிலையில், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் தற்போது முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச முன்னிலை வகிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய, அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக பசில் ராஜபக்ச களமிறக்கப்படலாமென கட்சியின் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, அடுத்த வருடம் அக்டோபர் மாதம் 17 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டுமெனவும் அரசியமைப்புக்கு அமைய குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படாவிட்டால் மக்கள் மீண்டும் வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பார்கள் எனவும் மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.