நாட்டிற்கு அழைத்துவரப்பட்டார் மிதிகம சூட்டி

சர்வதேச காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த இலங்கையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த முக்கிய புள்ளியான பிரபாத் மதுசங்க எனப்படும் ‘மிதிகம சூட்டி’, இன்று அதிகாலை ஓமானிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
ஓமானில் தங்கியிருந்தபோது சர்வதேச காவல்துறையினரால் விடுக்கப்பட்டிருந்த சிவப்பு எச்சரிக்கை (Red Notice) அடிப்படையில் அந்த நாட்டுப் பாதுகாப்பு அதிகாரிகளால் இவர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார்.
இவரைப் பொறுப்பேற்று இலங்கைக்கு அழைத்து வருவதற்காகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மூன்று அதிகாரிகள் ஏற்கனவே ஓமானுக்குப் பயணித்திருந்தனர்.
இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இவரை, அங்கு காத்திருந்த விசேட அதிகாரிகள் குழுவினர் பொறுப்பேற்றனர்.
தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் உள்ள இவரிடம், அவர் மேற்கொண்ட குற்றச் செயல்கள் மற்றும் அவருடன் தொடர்புடைய ஏனைய கும்பல்கள் குறித்து விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.




