பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மீதான கொலைக் குற்றச்சாட்டு : 16 வருடங்களின் பின்னர் விடுதலையான தமிழ் அரசியல் கைதிகள்

2006 ஆம் ஆண்டு இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் பயணித்த வாகனத் தொடரணி மீது குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் மூவரையும் விடுதலை செய்ய கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீண்ட விசாரணைக்குப் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மகேன் வீரமன் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.
2006இல் நடந்த சம்பவம்
குறித்த பிரதிவாதிகளுக்கு எதிரான முன்வைத்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத காரணத்தால் அவர்கள் விடுவிக்கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

யோகராஜா நிரோஜன், கரன் எனப்படும் சுப்பிரமணியம் சுரேந்திர ராஜா மற்றும் கனகரத்தினம் ஆதித்தியன் ஆகிய மூவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மூன்று பிரதிவாதிகளும் ஏறக்குறைய 15 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததாக சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி வாகனத் தொடரணி மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தி அப்போதைய பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் பசீர் அலி முகமதுவை படுகொலை செய்ய சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டடே குறித்த மூவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் அரச தரப்பில் சிரேஸ்ட அரச சட்டத்தரணி யோகான் அபேவிக்ரம முன்னிலையானதுடன், கனகரத்தினம் ஆதித்தியன் சார்பில் சட்டத்தரணி தர்மஜா தர்மராஜாவின் அனுசரணையில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா சட்டத்தரணி கனில் மத்துமகே முன்னிலையாகினர்.

மற்றைய எதிரிகள் சார்பில் சட்டத்தரணிகளான கனகா சிவபாதசுந்தரம் மற்றும் தனுக மத்துமகேயும் முன்னிலையாகியிருந்தனர்.