நாட்டில் புதிய செயலகங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் சபையில் பிரதமரிடம் கோரிக்கை

நாட்டில் இருக்கும் பிரதேச செயலகங்கள் மற்றும் உப பிரதேச செயலகங்கள் போதுமானதாக இல்லை. அதனால் புதிய செயலங்கள் நிறுவப்பட வேண்டும். நுவரெலியா மாவட்டத்தில் இவ்வாறான அலுவலகங்கள் ஸ்தாபிக்கப்படுவதாக கூறப்பட்டாலும் அவை பெயரளவிலேயே இயங்கி வருகின்றன என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (27) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பிரதமரின் ஒருங்கிணைப்பு அதிகாரி என கூறிக்கொள்ளும் ஒரு குறிப்பிட்ட நபரும் குழுவும் டென்மார்க்கில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, இந்நாட்டு இளைஞர்களிடம் இருந்து தலா 6 இலட்சம் ரூபா வீதம் பெற்றுள்ளன ,இது குறித்த செய்தி ஒளிபரப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பில் முறையான விசாரணை நடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். அத்துடன் பட்டதாரிகளுக்கு வேலை வழங்குவதில் விடுபட்ட 465 பேரின் வேலைப் பிரச்சினை குறித்து பலமுறை தெரிவித்தாலும், இப்பிரச்சினைக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை, அவர்களுக்கு உடனடியாக வேலை வழங்கப்பட வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் நாட்டில் பிரதேச செயலகங்கள் மற்றும் உப பிரதேச செயலகங்கள் 341 இருந்தாலும், மக்களின் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்ய இவை போதுமானதாக இல்லை. அதனால் பல மாவட்டங்களில் புதிய பிரதேச செயலகங்கள் நிறுவப்பட வேண்டும். நுவரெலியா மாவட்டத்தில் இவ்வாறான அலுவலகங்கள் ஸ்தாபிக்கப்படுவதாக கூறப்பட்டாலும் அவை பெயரளவிற்கு மட்டுமே இயங்கி வருகின்றன. அந்த நிறுவனங்கள் செயற்திறமையுடன் இயங்க தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அதேபோன்று நாட்டில் தற்போதுள்ள கிராம அலுவலர்கள் பிரிவுகளில் விரைவான மக்கள்தொகை அதகரிப்பின் காரணமாக,பரந்த கிராம சேவை அலுவலர் பிரிவுகளை நிறுவ வேண்டும் . இவற்றை ஆய்வு செய்து புதிய கிராம சேவை அலுவலர்கள் பிரிவுகளை உருவாக்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் கிராம சேவை அலுவலர்களுக்கான சேவை பிரமாணம் வழங்குமாறும், முறையான சம்பள மட்டத்தை ஏற்படுத்துமாறும்,தமது கடமைகளை மேற்கொள்வதற்குத் தேவையான வளங்களை வழங்குமாறும் கிராம உத்தியோகத்தர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மொட்டு கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ்வின் ஆலோசனையின் பேரில் அமைச்சரவை தீர்மானத்தின் மூலம் 120,000 ஓய்வூதியதாரர்களுக்கு சம்பள உயர்வுகளை உடனடியாக நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.

இவ்வாறு இடைநிறுத்தும் போது,மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரச வருமானம் 12 வீதமாக இருந்தது. இதன் பிறகு 600 முதல் 700 பில்லியன் ரூபா வரை வரிச்சலுகைகள் பெரும் செல்வந்தர்களுக்கு வழங்கப்பட்டதால் அரச வருமானமும் 8 சதவீதமாக வீழ்ச்சி கண்டது. அதனால் இந்த ஓய்வூதியர்களுக்கு குறித்த கொடுப்பனவை வழங்க முடியாமல் போனது. இந்த தவறை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நாட்டின் அரச சேவையை மிகவும் உகந்த மற்றும் அறிவார்ந்த முறையில் கொண்டு செல்ல புதிய பயிற்சி திட்டங்களை செயல்படுத்த வேண்டும். சிங்கப்பூரில் உள்ள சிவில் சேவை கல்லூரிக்கு இணையான கல்லூரியை நிறுவு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ,இந்தியா போன்ற நாடுகளில் உள்ள புலமைப்பரிசில் திட்டங்களைப் பார்த்து அறிவை வளர்த்துக் கொள்ள ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.