மயிலத்தமடு மேச்சல்த்தரை விவகாரம் தொடர்பில்!தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது குற்றச்சாட்டு

மட்டக்களப்பு மயிலத்தமடு மேச்சல்தரை விவகாரம் தொடர்பாக பிரபல சட்டத்தரணி இரத்தினவேலினால் கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றில் வழக்கு தாக்குதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், இரா.சாணக்கியன் மக்களை ஏமாற்றுவதற்காக வழக்கு தொடரப் போவதாக அறிவித்து மீண்டும் ஒரு கபட நாடகத்தை நடாத்தியுள்ளனர் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்ததார்.

மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷின் வீட்டில் நேற்று இரவு இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மயிலத்தமடு மேச்சல்தரை பிரச்சனை பாரிய பிரச்சனை இந்த பகுதியில் அவர்கள் கால்நடைகளை நீண்டகாலமாக மேய்க்க முடியாமல் சிங்கள மக்களால் தொடர்ந்தும் அச்சுறுத்தப்பட்டு வருகின்றது. கடந்த நல்லாட்சி காலத்தில் இதுதொடர்பான பிரச்சனைகள் அதிகப்படியாக இடம்பெற்றது.

அப்போது பண்ணையாளர்களால் அதுதொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் முறையிட்டும் கூட அவர்கள் இழுபறிபோக்கை கடைப்பிடித்து வந்ததுடன் அந்த மக்களின் வாழ்வாதாரம் தொடர்பாகவோ இப்பிரச்சனை தொடர்பாகவோ எந்தவிதமான முடிவும் இல்லாமல் கடந்த அரசாங்கத்தை முற்றுமுழுதாக முட்டுக்கொடுத்து தற்போது, ஆட்சி செய்கின்ற ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு செயலாளராக இருக்கின்ற கமால் குணரட்ண இராணுவ தளபதி சவேந்திர சில்லா போன்றவர்களை காப்பாற்றியுள்ளனர்.

அதேவேளை கடந்த அரசாங்கத்தின் விருப்பங்களை பல்வேறு பகுதிகளாக நிறைவேற்றியிருக்கின்றனர். ஆனால் இந்த மாவட்டத்தில் இருந்த மயிலத்தமடு மேச்சல்தரை மற்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்தல் போன்ற பாரதூரமான விடயங்களை தங்களுக்கு வாய்ப்பு இருந்த காலத்தில் சரியான முறையில் பயன்படுத்தவில்லை.

ஆனால் தற்போது கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பிர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன். இரா.சாணக்கியன், கோ.கருணாகரம் மயிலத்தமடு பண்ணையாளர்களை சந்தித்து ஒருநாடகத்தை நடத்தி வழக்கு தொடரப்போவதாக அறிவித்துள்ளனர்.

உண்மையிலே மயிலத்தமடு பிரச்சனை தொடர்பாக பண்ணையாளர்களின் ஒத்துழைப்புடன் நீதிமன்றம் ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை பிரபல சட்டத்தரணி இரத்தினவேல் வழக்கு தாக்குதல் செய்துள்ளார். அது தொடர்பாக எதிராளிகளுக்கு நீதிமன்றினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலையை கடந்த ஆட்சி காலத்தில் கடந்த அரசைக்காப்பற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்திருக்க வேண்டும். ஆனால் மக்களை ஏமாற்றுவதற்காக தற்போது இங்குவந்து கபட நாடகத்தை செய்திருக்கின்றனர் .

2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை நிறைவேற்ற அரசுடன் ஏதோ ஒரு விதத்தில் டீல் பேசி இருக்க வேண்டும். ஏன் என்றால் அந்த பட்ஜெட்டை எதிர்க்காமல் வாக்களிக்காது நழுவிவிட்டார்கள். எதற்காக நழுவியது என்பது அரசுடன் ஒத்து ஓடுகின்ற செயற்பாட்டிற்காக. சர்வதேச சமூகம், எத்தனை பேர் எதிர்த்திருக்கின்றார்கள் என பார்க்குமே தவிர இவர்களுடைய கருத்துக்களை பொருட்படுத்தமாட்டார்கள்.

தேர்தல் வருகின்ற போது இப்படிபட்ட ஒரு நாடகத்தை செய்வது வழமை. இவ்வாண்டும் இந்த நடைமுறையை கையில் எடுத்திருக்கின்றனர். இந்த மேச்சல்தரை பிரச்சனை கிட்டத்தட்ட 8 ஆயிரம் ஏக்கர் காணியை சோளம் பயிர் செய்கைக்காக வெளிமாவட்டத்தில் இருந்து சிங்கள மக்கள் அத்துமீறி உழுது சோளம் பயிர் செய்கை செய்வதற்காக இவ்வாண்டு வரவு செலவு திட்டத்தில் சோளப் பயிர் செய்கைக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால் அந்த பட்ஜெட்டை எதிர்க்காமல் இங்கு வந்து கொண்டு இன்று பண்ணையாளருக்கு ஒரு பொய் வேசத்தைக் காட்டிக்கொண்டு செல்லுகின்ற நிலைப்பாடு காணப்படுகின்றது. எனவே மக்கள் மிகத் தெளிவாக விளங்கி கொள்ள வேண்டும். யார் வந்து இந்த அரசாங்கத்தை எதிர்த்து இந்த மக்களுக்கான நீதியான நியாயமான ஒரு தீர்வைப் பெறுவதற்காக ஒரு விடாப்பிடியாக நின்று செயற்படுகின்றார்கள் என்ற விடயத்தை மக்கள் தெளிவாக விளங்கி கொள்ள வேண்டும்.

இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு காலத்தை இழுத்தடிப்பு செய்து எங்கள் மீது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற கட்டமைப்புசார் இனவழிப்பு போன்றவற்றுக்கு இவர்கள் பங்காளிகளாக இருக்கின்றார்களே தவிர உண்மையிலே தமிழ் மக்களுக்கு ஒரு சரியான தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும் என இதுவரை செயற்படவுமில்லை செயற்படபோவதுமில்லை.

ஆகவே தமிழ் தேசியத்தின்பால் நிற்கின்ற இளைஞர்களே, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, எங்கள் மக்களுக்காக கடந்த 11 வருடங்களாக பயணித்துக் கொண்டிருக்கின்றோம். இன்றைக்கும் நாடாளுமன்றத்தில் எமது தலைவர் கஜேந்திரகுமார் தமிழ் மக்களுடைய வரலாறு, சிங்கள மக்கள் தமிழ் மக்களுடைய பிரச்சனையை எவ்வாறு கையாண்டுவருகின்றது தொடர்பாகவும் நடந்த அநீதி தொடர்பாகவும் தெளிவாக பேசி சர்வதேச மட்டத்தில் வல்லுனர்களை கவர்ந்திருக்கின்றார்.

தமிழ் மக்களுடைய உண்மையான பிரச்சனை எடுத்துக்கூறப்படுகின்றது. அதற்கு அடுத்த நாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மூன்று மொழிகளில் பேசுவதாக ஒரு ஆவேசமான பேச்சை பேசியிருக்கின்றார். அது இந்த இளைஞர்களையும் மக்களையும் பேய்க்காட்டுகின்ற ஒரு நாடகம் அதை ஒரு மிமிக்கிரியாக பார்க்கின்றோம். அவரும் அன்று பட்ஜெட்டில் இருந்து நழுவிவிட்டார்.

பேச்சும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டும் எங்களைப் பொறுத்தமட்டில் பேச்சும் செயற்பாடும் ஒன்றாக இருக்கின்றதே தவிர, ஊடகத்திலும் அதனைத்தான் பேசுகின்றோம் மக்களிடமும் அதனைத்தான் பேசுகின்றோம்.

கூட்டமைப்பு மீண்டும் ஒரு கபட நாடகத்தை அரங்கேற்ற முற்படுகின்றது. எனவே இளைஞர் யுவதிகளே தெளிவாக இருக்க வேண்டும். தமிழ் மீதும் தமிழ் மண்ணின் மீதும் இனத்தின் மீதும் பற்றுக் கொண்டுள்ள நீங்கள் மீண்டும் ஒரு முறை ஏமாறக்கூடாது விழிப்படைய வேண்டும். எங்களுடைய மக்களின் அடிப்படை பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.

மாவீரர் தினத்துக்கு நான் வாகரைக்கு சென்ற போது பொலிசார் என்னை கைது செய்தனர். காரணம் கொரோனா சுகாதார சட்டம் என்றனர். ஆனால் பிள்ளையான் நேற்று முன்தினம் வாகரைக்கு சென்று மாணவர்களை அழைத்து அவருக்கு ஏற்ற விதமாக சுகாதார கட்டுப்பாட்டை மீறி செயற்படுகின்றார் அப்போது கொரோனா சட்டம் எங்கே?

இந்த நாட்டிலே அரச தரப்புக்கு மட்டும் ஒரு சட்டம் எங்களுக்கு ஒரு சட்டமா? என்ன சட்டம் யாருக்கு சட்டம் விதிக்கப்பட்டிருக்கின்றது. சில கல்வி அதிகாரிகள் தமது சலுகைகளுக்காக அரசியல்வாதிகளுக்கு துணைபோகின்றார்களா என்ற கேள்வி எழுகின்றது.

ஊர்வலத்துக்கு மாணவர்களை பயன்படுத்திய போது காவல்துறை அதிகாரி மயக்க நிலையில் இருந்தாரா? இந்த விடயங்களை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அரசாங்கத்துக்கு தவறுதலாக வாக்களித்திருந்தால் இந்த தடவையுடன் நீங்கள் விழிக்க வேண்டும்.

ஏன் என்றால் உங்கள் எதிர்கால சந்ததியினரின் வாழ்கைக்கு நீங்கள் கிடங்கு வெட்டுகின்றீர்கள் என்றது தான் அர்த்தம் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.