தமிழரை சிறுபான்மை இனம் என முத்திரை குத்தி மன்னாரில் விழிப்புணர்வு போராட்டம்

சிறுபான்மை இன மக்களின் மத உரிமைக்கு மதிப்பளிக்க கோரி மன்னாரில் இன்று காலை அமைதியான முறையில் விழிர்ப்புணர்வு போராட்டம் இடம்பெற்றுள்ளது.

மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தின் (மெசிடோ) ஏற்பாட்டில், அதன் குழுமத்தலைவர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் வட கிழக்கு ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பாக குறித்த விழிர்ப்புணர்வு போராட்டம் இடம்பெற்றுள்ளது.

மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் இன்று காலை 10.30 மணியளவில் ஒன்று கூடிய மக்கள் அமைதியான முறையில் குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டத்திற்கு மன்னாரின் இளம் சட்டத்தரணிகள் ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டதோடு, நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், மன்னார் நகரசபையின் உப தலைவர், உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது குறித்த விழிர்ப்புணர்வு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சிறுபான்மை இன மக்களின் மத உரிமைக்கு மதிப்பளிக்க கோரியதுடன், உயிருடன் இருக்கின்ற போது உடலுக்கு கொடுக்கின்ற மதிப்பினை அவர்கள் மரணிக்கின்ற போது அவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினையும் முன்வைத்துள்ளனர்.

மேலும் கொரோனா தொற்று காரணமாக இறந்தவர்களின் சடலங்கள் தகனம் செய்யப்படுகின்றமை உறவினர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்துகின்றது.

எனவே உலக சுகாதார ஸ்தாபனத்தின் செயல் திட்டங்களை உள் வாங்கி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையினை முன் வைத்து குறித்த விழிப்புணர்வு போராட்டத்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தின் (மெசிடோ) ஏற்பாட்டில், வட கிழக்கு ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பாக வடக்கு, கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் குறித்த விழிர்ப்புணர்வு போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.