தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுப்போம்! செல்வராசா கஜேந்திரன்

வனவளத்திணைக்களத்தினால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக தொடர்ந்து அழுத்தங்களை பிரயோகிப்போம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவிற்கு இன்று விஜயம் செய்த அவர் கற்குளம் 3 மற்றும் கற்குளம் 4 ,மதுராநகர் போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டுள்ளார்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இந்த பகுதியில் உள்ள பெருமளவான குடும்பங்களிற்கு காணிகளிற்கான உறுதிபத்திரங்கள் வழங்கப்படவில்லை.வீட்டுத்திட்ட திட்டங்கள் வழங்கப்படவில்லை.

அதிகமான மக்கள் தற்காலிக கொட்டில்களிலேயே வசித்து வருகின்றனர். உபகுடும்பங்களும் தமது பிள்ளைகளுடன் சிறிய வீடுகளிலேயே ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.

குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படவில்லை. மலசலகூடம் இல்லை.அவர்கள் காலைக்கடன்களை கழிப்பதற்கு கூட பற்றைகளை பயன்படுத்தும் நிலையே காணப்படுகின்றது.

பல வருடங்களாக அவர்களுக்கு எந்தவித உதவிகளும் வழங்கப்படவில்லை.அத்துடன் பற்றைகளாக இருக்கும் தமது காணிகளை துப்புரவாக்கி பயிர் செய்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு நெருக்கடிகள் ஏற்படுத்தப்படுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனினும் அருகில் உள்ள சிங்கள கிராமங்களை சேர்ந்த மக்கள் சுதந்திரமாக அந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த விடயங்கள் தீர்க்கப்பட வேண்டும் உரிய அதிகாரிகள் இந்த விடயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்கள் நீண்ட காலமாக பராமரித்த காணிகளை வனவள திணைக்களம் சொந்தம் கொண்டாடுகின்றமை தொடர்பாக உரிய அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவரது கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறோம்.

நாடாளுமன்றத்திலும் பேசியிருக்கிறோம். இதனை பேசி தீர்க்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் அந்த நிலமை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. எமது அழுத்தங்களை தொடர்ந்து பிரயோகித்து வருவோம் என்றும் தெரிவித்துள்ளார்.