கருத்த முரண்பாடு ஏராளமாக இருந்தது. ஆனால் இறுதியில் ஓர் இணக்கப்பாடு

ஜெனிவா அமர்வு தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மூன்று கட்சிகளின் தலைவர்களின் கலந்துரையாடலில் வரையப்பட்ட வரைபு சிறிய மாற்றம் செய்யப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என கிளிநொச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஜெனிவா விடயங்களை கையாள்வதற்கு ஒரு பொறிமுறையை உருவாக்குவதற்கான கலந்துரையாடலின் நிறைவில் ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வருகின்ற மார்ச் மாதத்தில் ஜெனிவாவில் நடக்க இருக்கின்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் தமிழ்த் தேசிய கட்சிகளும், பாதிக்கப்பட்ட தரப்பினரும், சிவில் சமூக அமைப்புக்களும் ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்கின்ற முயற்சி சென்ற டிசம்பர் மாதம் 29ம் திகதி இதே மண்டபத்தில் ஆரம்பமானது. அதை தொடர்ந்து ஜனவரி 3ம் திகதி வவுனியாவில் ஒரு கூட்டம் இடம்பெற்றது. அதன் பின்னர் மூன்று கட்சிகளின் தலைவரகள் சேர்ந்து கடந்த 6ம் திகதி ஒரு கூட்டமும் இடம்பெற்றிருந்தது. இதன் பின்னணியில் இதற்கான வரைபும் தயாரிக்கப்பட்டு இன்றைய கூட்டத்தில் அது கலந்துரையாடப்பட்டது.

அந்த வரைபில் இருக்கின்ற விடயங்கள் குறித்து சில மாறுபட்ட கருத்துக்கள் ஆரம்பத்தில் இருந்திருந்தாலும், இறுதியில் ஒரு இணக்கப்பாடு எய்தப்பட்டிருக்கின்றது. அதன்படி அந்த வரைபு சற்று மாற்றியமைக்கப்படும். அது மாற்றியமைக்கப்பட்ட பின்னர் அது வெளியிடப்படும். அப்படியான குறித்த நிலைப்பாட்டிற்று அனைத்து கட்சிகளும், அனைத்த பிரதிநிதிகளும் வந்தமை மிகவும் வரவேற்கவேண்டிய விடயம். அந்த வரைபை இறுதி செய்து அனைவரும் இணங்கிய பிறகு அதனை நாங்கள் ஊடகங்களிற்கு வெளிப்படுத்துவோம் என அவர் குறிப்பிட்டார்.

இன்றைய கூட்டத்தில் கட்சிகளிற்கிடையில் ஏதேனும் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டதா என அவரிடம் ஊடகவியலாளர் வினவியபோது அதற்கு பதிலளித்த சுமந்திரன்,

கருத்த முரண்பாடு ஏராளமாக இருந்தது. ஆனால் இறுதியில் ஓர் இணக்கப்பாடு ஏற்பட்டதாக நான் நம்புகின்றேன். அது சரியான ஒரு ஆவணமாக வருகின்ற வரைக்கும் நாங்கள் அதனை வெளிப்படுத்த விரும்பவில்லை என குறிப்பிட்டார். அதேவேளை மேலும் ஒரு கலந்துரையாடலுடன் அதனை இறுதி செய்து விடலாம் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.